புத்தரின் போதனைகள்: தீகநிகாயம்
தீகநிகாயம்- சுத்த பிடகம் என்ற தலைப்பில் புத்தரின் போதனைகள், பாலி, ஆங்கில நூல்களிலிருந்து சுருக்கமாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக்கம் பெற்றுள்ளது.
புத்தரின் போதனைகள்: தீகநிகாயம்- நீண்ட பேருரைகள்- தமிழில்: முனைவர் போதிபால மகாதேரோ மற்றும் குழுவினர்; பக். 512; ரூ. 500; திரிபிடகத் தமிழ் நிறுவனம், சென்னை-600 126, ✆ 94453 69542.
தீகநிகாயம்- சுத்த பிடகம் என்ற தலைப்பில் புத்தரின் போதனைகள், பாலி, ஆங்கில நூல்களிலிருந்து சுருக்கமாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக்கம் பெற்றுள்ளது. நிப்பாண அனுபவம் பெற்ற 35 வயது முதல் மகா பரிநிப்பாணம் அடைந்த 80 வயது வரையிலும் 45 ஆண்டு காலம் புத்தர், பாலி மொழியில் 84 ஆயிரம் போதனைகளைத் தமது சீடர்களுக்கும் மக்களுக்கும் போதித்துள்ளார்.
புத்தரின் மறைவுக்குப் பிறகு திரிபிடகம் நூலாகத் தொகுக்கப்பட்டுச் செவிவழியாகப் பயிலப்பட்டுவந்த நிலையில், முதன்முதலாக இலங்கையில் சிங்கள எழுத்தில் பாலி மொழியில் எழுத்தாக்கம் பெற்றது. இந்த நூல் பல நாடுகளுக்கும் பரவ பாலி மொழியிலேயே அனைவராலும் பயிலப்பட்டும் வந்தது.
Advertisement
Advertisement
19-ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் வேறொரு மொழியில் -ஆங்கிலத்தில், இலங்கை வந்த இங்கிலாந்து அறிஞர் ரையிஸ் டேவிட்ஸ் என்பவரால் பெயர்க்கப்பட்டது. பின்னர் சிங்களத்தில் முழுவதும் பெயர்க்கப்பட்டது. தற்போது தமிழிலும் வெளிவரத் தொடங்கியுள்ளது. முதல் முயற்சியாக தமிழில் சுத்த பிடகத்தின் தீகநிகாயம் வெளிவந்திருக்கிறது.
நூலில் மூன்று பிரிவுகளைக் கொண்ட தீக நிகாயத்தில் புத்தரின் 34 போதனைகள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் படைக்கும் ஆற்றலுள்ள பிரம்மா என்றொருவர் இல்லை எனத் தொடங்கி, அஜாதசத்ருவுக்குத் துறவியாக இருப்பதன் பலன், அந்தணர் என்போர் யார்? விலங்குகள் பலியிடப்படும் யாகத்தின் தீமைகளை புத்தர் விளக்குகிறார்.
மகா பரிநிப்பாண சுத்தங்கின்- சூத்திரத்தின் இறுதிப் பேருரையில், பிக்குகள் நிப்பாணம் அடைவதற்கான விதிமுறைகளை - தாழ்நிலையுறாமல் தடுக்கும் ஏழேழு நியமங்களைக் கூறுகிறார்.
அடுத்தடுத்த சுத்தங்களில் ஜாதி அமைப்பு பற்றி விவாதிப்பதுடன், உலகில் பொருள்கள் தோன்றியதிலிருந்து நான்கு ஜாதிமுறைகள் தோன்றியது வரையிலான விளக்கம், இல்லறத்தார்களுக்கான இல்லறக் கடமைகள் போன்றவற்றுடன் சாரிபுத்தரின் தம்ம விளக்கமும் இடம் பெற்றிருக்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.