தமிழக அரசு ஊழியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்வு : முதல்வர்
தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி 8% உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் இன்று அறிவித்தார்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி 8% உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் இன்று அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்று இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுப் பேசிய முதல்வர் ஜெயலலிதா, தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி 8% உயர்த்தப்படும். இது கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்பட உள்ளது.
இது குறித்து முதல்வர் விதி எண் 110ன் கீழ் அறிவித்தது...
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 1.1.2013 முதல் அவர்களுடைய அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் எட்டு விழுக்காடு உயர்த்தி, தற்போதுள்ள 72 விழுக்காடிலிருந்து 80 விழுக்காடாக வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது போல், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியையும், அவர்களது அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் எட்டு விழுக்காடு உயர்த்திட உத்தரவிட்டுள்ளேன்.
Advertisement
இந்த அகவிலைப்படி உயர்வு உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள்; ஆசிரியர்கள்; வருவாய்த் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள்; அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள்; ஊராட்சி உதவியாளர்; எழுத்தர்; ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைவருக்கும் பொருந்தும். இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் என சுமார் 18 லட்சம் பேர் பயனடைவார்கள்.
இந்த அதிகரிக்கப்பட்ட அகவிலைப்படி 1.1.2013 முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1,639 கோடியே 93 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்
- என்று கூறியுள்ளார்.