முகப்பு
தற்போதைய செய்திகள்

எரிவாயு விலை உயர்வு : விசாரணை கோரும் இந்திய கம்யூனிஸ்ட்

எரிவாயுவுக்கு அதிகப்படியான விலை நிர்ணயித்திருப்பதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கோரி அது குறித்து விசாரணை நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Updated On : 21 ஜூன், 2013 at 3:39 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:13 PM

எரிவாயுவுக்கு அதிக விலை நிர்ணயித்திருப்பதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கோரி அது குறித்து விசாரணை நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா கூறியிருப்பதாவது, ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கும் வகையில், இயற்கை எரிவாயுக்கு மத்திய பெட்ரோலியம் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி அதிக விலை நிர்ணயித்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து பிரதமருக்கு கடிதம் ஒன்றும் எழுதியுள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு எதிராக முந்தைய பெட்ரோலியம் துறை அமைச்சர் எடுத்த நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்தி வைத்துள்ளார் தற்போதைய அமைச்சர் வீரப்ப மொய்லி. கிருஷ்ணா - கோதாவரி படுகையில் இயற்கை எரிவாயுவை எடுப்பதில், அரசுடனான ஒப்பந்தத்தை மீறியதற்கு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட ஒரு பில்லியன் டாலர்கள் அபராதத்தை வசூலிக்க ஜெய்பால் ரெட்டி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். ஆனால் அவை அனைத்தும் தற்போது கைவிடப்பட்டுவிட்டது.

Advertisement

அங்கு உற்பத்தி குறைந்ததால், ரூ.1.1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு, அதனால், மின்சாரம், உரம் தயாரிப்பு ஆகியவை பாதிக்கப்பட்டது. இது அனைத்தையும் அறிந்துள்ள பெட்ரோலியம் அமைச்சர் வீரப்ப மொய்லி, தற்போது, ரிலையன்ஸ் நிறுவனம் அதிகமாக லாபம் அடையும் வகையில், ஏற்கனவே எரிவாயு விலையை நிர்ணயம் செய்த ரங்கராஜன் குழு பரிந்துரைத்த தொகையை விட அதிகமான தொகையை பரிந்துரைத்துள்ளார்.

நாட்டின் நலனை புறக்கணித்துவிட்டு, இப்படி ஒரு தனியார் நிறுவனத்தின் நலனுக்காக அமைச்சர் செயல்படுவது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். எனவே, இது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், வீரப்ப மொய்லி பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார் குருதாஸ் தாஸ்குப்தா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.