புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்
இந்நிலையில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு சட்டப்பேரவையில் கடந்த ஜூலை 31-ம் தேதி அதிமுக கொண்டு வந்த தீர்மானத்தை அரசு தீர்மானமாக ஏற்று அது நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரும் அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு என்.ஆர்.காங்கிரஸ் விடுத்த அழைப்பை அதிமுக, காங்கிரஸ் கட்சிகள் புறக்கணித்துள்ளன.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்கும் கோரிக்கை பல ஆண்டுகளாக தொடர்ந்து நிலுவையில் இருக்கிறது.
இந்நிலையில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு சட்டப்பேரவையில் கடந்த ஜூலை 31-ம் தேதி அதிமுக கொண்டு வந்த தீர்மானத்தை அரசு தீர்மானமாக ஏற்று அது நிறைவேற்றப்பட்டது.
Advertisement
Advertisement
ஆனால், மாநில அந்தஸ்து பெறுவதற்கான நடவடிக்கைகள் ஏதும் தொடங்கப்படாமலேயே இருந்தன.
இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் நிலவும் நிதிப் பற்றாக்குறை, அதிகாரக் குறைவு ஆகிய காரணங்களைச் சுட்டிக்காட்டி, புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து தேவை என கடந்த நவம்பர் 26-ம் தேதி நடந்த என்.ஆர்.காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
மேலும் கடந்த பிப்ரவரி 7-ம் தேதி நடைபெற்ற என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 2-வது ஆண்டு மாநாட்டிலும் முதல்வர் என்.ரங்கசாமி இதனை வலியுறுத்தியிருந்தார்.
இதனிடையே திடீர் திருப்பமாக, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோருவது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
இக்கூட்டம் இன்று காலை 11 மணிக்கு ஓர் தனியார் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருப்பதாக தெரிகிறது.
இக்கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக அதிமுக, காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள் சனிக்கிழமை ஆலோசனை நடத்தின.
இதன் மூலம் என்.ஆர்.காங்கிரஸ் ஏற்பாடு செய்திருக்கும் அனைத்துக் கட்சி கூட்டம் தொடர்பான தகவல் வெளியானது.
அதிமுக, காங்கிரஸ் புறக்கணிப்பு:
இது குறித்து அதிமுக மாநிலச் செயலரும், சட்டப்பேரவை அதிமுக தலைவருமான ஆர்.அன்பழகன் எம்.எல்.ஏ. கூறியது:
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி பேரவையில் 8 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
அதில் 4 தீர்மானங்கள் நிறைவேறும்போது முதல்வராக இருந்தவர் என்.ரங்கசாமி. கடைசியாக அதிமுக கொண்டுவந்த தீர்மானத்தை அரசு சார்பில் ஏற்றுக்கொண்டு, தற்போது என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கிறார்.
நிதி நெருக்கடி, மோசமான நிர்வாகம், ஊழல்கள் போன்ற பிரச்னைகளால் கட்சிக்கும், ஆட்சிக்கும் ஏற்பட்டிருக்கும் அவப்பெயரைப் போக்கும் வகையில் மாநில அந்தஸ்து பிரச்னையை முதல்வர் கையில் எடுத்துள்ளார்.
அரசு சார்பில் முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றால் மட்டுமே அதில் அதிமுக பங்கேற்கும். என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் நடைபெறும் கூட்டத்தை அதிமுக புறக்கணிக்கிறது என்றார் அவர்.
இதே கருத்தினை காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியனும் கூறியுள்ளார்.