இலங்கையில் சர்வதேச மூத்தோர் தடகளப் போட்டி: திருச்சி சிறப்பிடம்!
இலங்கையில் நடந்த சர்வதேச மூத்தோர் தடகளப் போட்டியில் திருச்சி மூத்த குடிமக்கள் பதக்கங்களை வென்றுள்ளனர்.
தம்மம்பட்டி: இலங்கையில் நடந்த சர்வதேச மூத்தோர் தடகளப் போட்டியில் திருச்சி மூத்த குடிமக்கள் பதக்கங்களை வென்றுள்ளனர்.
இலங்கையில் நடந்த 10வது மாஸ்டர்ஸ் தடகள(அத் லட்டிக்ஸ்) சாம்பியன்ஷிப் - 2024 போட்டியில் முதியோர் பிரிவில் கலந்து கொண்ட திருச்சியைச் சேர்ந்த மூத்தக் குடிமக்கள் வென்றுள்ளனர்.
இலங்கையில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் மே 25, 26 ஆகிய தேதிகளில் 10வது மாஸ்டர்ஸ் அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் - 2024 தடகளப் போட்டிகள் நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதில் இலங்கை, இந்தியா, சிங்கப்பூர்,மலேஷியா உள்ளிட்ட 14க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 35 - 85 வயதுடைய விளையாட்டு வீர்ர்கள் பங்கேற்றனர். தமிழகத்தைச் சேர்ந்த 25 பேர்கள் உள்பட 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களில் திருவெறும்பூர் அருகே கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியைச் சேர்ந்த கணேசபுரம் துரைராஜ்(80) சம்மட்டி எறிதல், வட்டு எறிதல் ஆகிய இரு போட்டிகளில் தங்கமும், ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கமும் பெற்றார்.
அதே ஊராட்சி எழில்நகரைச் சேர்ந்த ச. செல்வராஜ்(67) 300 மீட்டர் தடை ஓட்டத்தில் தங்கமும், 800 மீ ஓட்டத்தில் வெண்கலமும் வென்றார். 65 வயதினர் பிரிவில் எழில் நகர் கலைச்செல்வன்(66) சம்மட்டி எறிதலில் வெண்கலமும், 60 வயதினர் பிரிவில் எழில் நகர் மனோகரன்(60) போல்வால்ட் தாண்டலில் வெள்ளியும், அதே பிரிவில் சம்மட்டி எறிதலில் கூத்தைப்பார் ஊராட்சி ஜெய்நகரைச் சேர்ந்த செல்வராஜன்(61) வெள்ளியும் பெற்றனர்.
பதக்கங்கள் பெற்ற இவர்கள் ஐவரும் திருச்சி பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பதக்கங்களுடன் சொந்த ஊர் திரும்பிய மூத்த குடிமக்கள் ஐவரும் உடல் ஆரோக்கியத்திற்காகவும், உற்சாகத்திற்கும் தடகள பயிற்சி செய்வதாகவும், இளைஞர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காக தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டு வென்று பதக்கங்கள் பெற முயற்சிப்பதாகவும் கூறினர்.