திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா சனிக்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
கந்த சஷ்டி விழாவானது ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 7 நாள்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா சனிக்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதனையொட்டி காலை 8.30 மணிக்கு அனுக்கை பூஜை,துவங்கி யாகசாலை பூஜைகள் நடைபெற்று,காலை உற்சவர் சன்னதியில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி,தெய்வானை,சண்முகர் சன்னதியில் சண்முகப்பெருமான் வள்ளி,தெய்வானை,உற்சவ நம்பியார்க்கும் காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனையடுத்து காலை 9 மணிக்கு கோயில் கம்பத்தடி மண்டபத்தில் சிவாச்சாரியார்கள் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. காப்புகட்டிய பக்தர்கள் பால்,மிளகு,துளசி ஆகியவற்றை ஒருவேளை மட்டுமே சாப்பிட்டு விரதம் இருப்பார்கள். பக்தர்கள் தினமும் காலை,மாலை சரவணப்பொய்கையில் நீராடி கிரிவலம் வருவர்.விழாவையொட்டி தினமும் சண்முகருக்கு பகல் 11 மணிக்கும்,மாலை 6 மணிக்கும் சண்முகார்ச்சனை நடைபெறும்.தினமும் தந்தத் தொட்டி விடையாத்தி சப்பரத்தில் தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தை 6 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாளிப்பார். இதேபோல வரும் 7 ஆம் தேதி வரை சுவாமி உற்சவர் சன்னதி யிலிருந்து திருவாச்சி மண்டபத்தில் தந்தத்தொட்டி சப்பரத்தில் எழுந்தருள்வார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வேல் வாங்குதல் நிகழ்ச்சி வரும் 6 ஆம் தேதி இரவு 6.30 மணியிலிருந்து 7.30 மணிக்குள் நடைபெறுகின்றது. மறுநாள் 7 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோயில் முன் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறும்.விழாவின் விழாவின் நிறைவு நாளான 7 ஆம் நாள் நிகழ்ச்சியாக 8 ஆம் தேதி காலை 9 மணிக்கு சிறிய சட்டத் தேரோட்டமும்,மாலை 3 மணியளவில் பாவாடை தரிசனமும் நடைபெறும்.
இதையும் படிக்க | திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா பூஜைகளுடன் தொடக்கம்
மதுரை பகுதியில் சஷ்டி விரதமிருக்கும் பக்தர்கள் 7 நாட்களும் திருப்பரங்குன்றம் கோயில் வளாகத்திலேயே தங்கியிருந்து பூஜைகளில் பங்கேற்பர். மேலும் கோயிலுக்குள் பக்தர்கள் வசதிக்காக தொலைக்காட்சி பெட்டிகள் மூலம் பூஜை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
கோயில் சார்பில் பக்தர்கள் தங்குவதற்கு பந்தல் அமைக்கப்பட்டு குடிநீர், மின்விளக்கு, மின்விசிறி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி சார்பில் கிரிவலப் பாதை பகுதி மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் நடமாடும் கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது.
விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் ப. சத்தியப்பிரியா, அறங்காவலர்கள் வ. சண்முகசுந்தரம், மணி செல்வம், பொம்மதேவன், ராமையா, கோயில் துணை ஆணையர் சூரிய நாராயணன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.