தமிழக நலனையும் பலி கொடுக்கத் துணிந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி: சு. வெங்கடேசன் எம்.பி.
அதிமுகவை பாஜகவிடம் அடகுவைத்துச் சரணடைந்ததைப் போல இப்போது மாநில நலனையும் பலி கொடுக்கத் துணிந்துவிட்டார் என சு. வெங்கடேசன் குற்றச்சாட்டு குறித்து....
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அமைதி நமக்கு உணர்த்துவது ஒன்றுதான். அதிமுகவை பாஜகவிடம் அடகுவைத்துச் சரணடைந்ததைப் போல இப்போது மாநில நலனையும் பலி கொடுக்கத் துணிந்துவிட்டார் என்பதே அவரது அமைதிக்கான அர்த்தம் என்று மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் 106-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் 2023-ஐ (நாரி சக்தி வந்தன் அதிநியம்) அமல்படுத்துவதற்கான சட்டத் திருத்த மசோதா ஏப்.16 முதல் ஏப்.18 வரை நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அறிமுகமாகவுள்ளது.
அப்போது மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 850-ஆக அதிகரிக்கப்பட்டு அதில் 280 தொகுதிகள் மகளிருக்கு ஒதுக்கப்படவுள்ளன. 850 இடங்களில் 815 இடங்கள் மாநிலங்களுக்கும், எஞ்சிய 35 இடங்கள் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒதுக்கப்படவுள்ளன.
Advertisement
தொகுதி மறுவரையறை வரைவு மசோதாவின்படி, மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கான தொகுதிகள் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தெரியவந்துள்ளது.
தொகுதி மறுவரையறை என்பது அரசமைப்பின் 81, 82 மற்றும் 170 பிரிவுகளின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள ஜனநாயக செயல்முறையாகும். புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு இல்லாமல், 2011 கணக்கெடுப்பு தரவின் அடிப்படையில் அவசரமாக செயல்படுத்துவது தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம், ஆந்திரம் போன்ற மக்கள் தொகை கட்டுப்பாட்டை முறையாக செயல்படுத்தி வெற்றிகண்ட தென் மாநிலங்களுக்கு இழைக்கும் அநீதியாகும் என்றும் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்துக்கான தொகுதிகள் குறைக்கப்பட்டால் 1950, 1960 -களில் நடத்தப்பட்டது போல மிகப் பெரிய அளவிலான போராட்டத்தை திமுக முன்னெடுக்கும் என்று மத்திய அரசுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இந்த நிலையில், தொகுதி மறுவரையறைக்கு மசோதாவுக்கு மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' பக்க பதிவில், மக்களவைத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையை அதிகரிப்பது, தொகுதிகளை மறுவரையறை செய்வதற்கான மசோதாக்களை வெளியிட்டுள்ளது மத்திய பாஜக அரசு.
பல்வேறு வளர்ச்சிக் குறியீடுகளில் முன்னேற்றம் கண்டிருக்கும் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் இந்த முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
வட இந்திய மாநிலங்கள் மட்டுமே ஒட்டுமொத்த இந்தியாவின் தலையெழுத்தை இனி தீர்மானிக்கும் அபாயமுள்ள இந்த மசோதாவைப் பாஜக அரசு கைவிடும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.
மக்கள் தொகைக் கட்டுப்பாடு தொடங்கிப் பல்வேறு திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி மருத்துவ வசதி, கல்வியறிவு, கட்டமைப்பு வசதி, வேலைவாய்ப்பு, பகுத்தறிவுச் சிந்தனை என அனைத்து முன்னேற்றங்களையும் அடைந்து இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய மாநிலம் தமிழ் நாடு.
மக்களின் நலனில் அக்கறை இல்லாத பாஜக
இந்திய மக்களின் நலனில் துளியும் அக்கறை இல்லாத பாஜக. அரசின் இந்த முயற்சியால் தமிழ்நாடு தன் வளர்ச்சிப் பாதையில் பின்னோக்கிச் செல்லும் அபாயம் எழுந்துள்ளது.
இந்தி ஆதிக்கத்தையும் மத வெறியையும் எப்போதும் புறந்தள்ளிய தமிழ்நாடு மக்கள் பாஜகவின் இந்த சதியையும் முறியடிப்பார்கள்.
நாளை நடைபெறும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படவுள்ள அரசியலமைப்பு (131வது திருத்தம்) மசோதா- 2026 நாம் அனைவரும் அஞ்சியதை விட மிகவும் ஆபத்தான அம்சங்களைக் கொண்டுள்ளது.
“பிரதமர் மற்றும் அமைச்சர்களின் உறுதிமொழிக்கு மாறாக, ஒவ்வொரு மாநிலத்திற்குமான தற்போதைய இடங்களின் விகிதாச்சாரம் பராமரிக்கப்படும் என்பதை உறுதிசெய்ய இந்த மசோதாவில் ஒரு வரி கூட இல்லை.”
மக்கள் விரோத பாஜகவைத் தலையில் வைத்துத் தூக்கித் திரியும் அதிமுக வின் தேர்தல் அறிக்கையில் 25 ஆவது வாக்குறுதியில், "தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டிற்கான தற்போதுள்ள விகிதாச்சார பிரதிநிதித்துவம் குறைந்துவிடாமல் இருக்க தொடர்ந்து வலியுறுத்துவோம்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில நலனையும் பலி கொடுக்கத் துணிந்துவிட்டார்
தற்போதைய இடங்களின் விகிதாச்சாரம் பராமரிக்கப்படும் என்பதை உறுதிசெய்யாத இந்த மசோதாவிற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி ஆவேச அறிக்கை ஒன்றை இந்நேரம் வெளியிட்டிருக்க வேண்டும். தங்களது மாநிலங்களவை உறுப்பினர்கள் இந்த மசோதா நகலைக் கிழித்தெறிய இந்நேரம் உத்தரவிட்டிருக்க வேண்டும்.
ஆனால், அப்படியெதுவும் நடந்ததாக தெரியவில்லை.
அவரின் அமைதி நமக்கு உணர்த்துவது ஒன்றுதான். கட்சியைப் பாஜகவிடம் அடகுவைத்துச் சரணடைந்ததைப் போல இப்போது நம் மாநில நலனையும் பலி கொடுக்கத் துணிந்துவிட்டார் என்பதே அவரது அமைதிக்கான அர்த்தம்.
காலனி நாடுகளைப் போல மாறும் அபாயத்தில் தென் மாநிலங்கள்
கடந்த 6 நாள்களாக அமித்ஷா இந்தியாவின் எந்த மாநிலத்திற்கும் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லவில்லை . மாறாக இந்த 131 ஆவது சட்டத்திருத்தத்தை கொண்டு வருவதன் மூலம் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை நிரந்தரமாகத் தோற்கடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த கத்தியை இப்பொழுது கழுத்தில் இறக்கப் பார்க்கிறார்கள்.
ஒற்றை இந்தியாவிற்குள் காலனி நாடுகளைப் போல தென் மாநிலங்கள் மாறுகிற அபாயம் ஏற்படப் போகிறது. இதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என அவர் கூறியுள்ளார்.