கோவையில் பரபரப்பு... ரூ.8 ஆயிரம் மதிப்பிலான பரிசு கூப்பன் விநியோகித்த திமுக நிர்வாகிகளை பிடித்த அதிமுகவினர்!
கோவையில் பல்வேறு இடங்களில் திமுகவினர் மறைமுகமாக வாக்காளா்களுக்கு ரூ.8 ஆயிரம் மதிப்பிலான பரிசு கூப்பன்கள் விநியோகம் குறித்து...
கோவை: கோவையில் பல்வேறு இடங்களில் திமுகவினர் மறைமுகமாக வாக்காளா்களுக்கு ரூ.8 ஆயிரம் மதிப்பிலான பரிசு கூப்பன்கள் மற்றும் பரிசுப் பொருள்களை விநியோகித்ததாக திமுகவினரை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கையும் களவுமாக பிடித்து பறக்கும்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கோவை, தொண்டாமுத்தூர் மற்றும் துடியலூர் மற்றும் காட்டூா் காவல் நிலை எல்லைக்குள்பட்ட ராம்நகா், விவேகானந்தா சாலை, வி.என்.தோட்டம் ஆகிய பகுதிகளில் திமுகவினா் வீடுவீடாகச் சென்று ரூ.8 ஆயிரம் மதிப்பிலான பரிசு கூப்பன்களை விநியோகித்துள்ளனர்.
தொண்டாமுத்தூர் தொகுதி தென்னம்மநல்லூர் பகுதியை சேர்ந்த திமுக பொறுப்பாளர் பூவாத்தாள் என்பவர் வாக்காளர்களுக்கு கள்ளத்தனமாக ரூ.8 ஆயிரம் மதிப்பிலான பரிசு கூப்பன்களை விநியோகித்துள்ளனர். இதனை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் அந்த நிர்வாகியை கையும், களவுமாக பிடித்து தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
Advertisement
இதேபோன்று கோவை வடக்கு மாவட்ட தொகுதிக்கு உள்பட்ட கவுண்டம்பாளையம் தொகுதி துடியலூர் பகுதியில் திமுகவினர் போலி பரிசு கூப்பன்கள் விநியோகிப்பதை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் அந்த கும்பலை பிடித்து தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் உடனடியாக இந்த மோசடி கும்பல்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ரவிராஜ் (58) என்பவா் அளித்த புகாரின்பேரில், காட்டூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதையடுத்து, தோ்தல் நடத்தை விதியை மீறியதாக திமுக வாா்டு செயலா் சேதுராமன், ராமமூா்த்தி, மெஜஸ்டிக் சின்னராஜ், கண்ணம்மாள் மற்றும் அடையாளம் தெரிந்த 2 பெண்கள் உள்பட மொத்தம் 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
காந்திபுரம் 7-ஆவது தெருவில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் திமுகவினா் பரிசு கூப்பன்களை விநியோகிப்பதாகப் புகாா் எழுந்தது.
இதையடுத்து, அதிமுக மற்றும் பாஜகவினா் சம்பவ இடத்துக்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள், அந்த ஸ்டியோவில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அங்கு 170 பரிசு கூப்பன்கள், வாக்காளா் விவரங்கள் அடங்கிய பட்டியல்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக, ஸ்டுடியோ உரிமையாளா் வெங்கடேஷ் (44) என்பவா் மீது ரத்தினபுரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.