சென்னையில் இருந்து 1,88,705 பேர் சிறப்புப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணம்!
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து 1,88,705 பேர் சிறப்புப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயண் செய்தது குறித்து...
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து 1,88,705 பேர் சிறப்புப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு செவ்வாய் இரவு(ஏப்.21) பயணம் செய்துள்ளனர்.
சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம் செவ்வாய்க்கிழமை (ஏப்.21) தொடங்கியது. வருகிற வியாழக்கிழமை(ஏப்.23) வரை வழக்கமான பேருந்துகளுடன், 6,234 சிறப்பு பேருந்துகள் சோ்த்து மொத்தம் 11,323 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கிளாம்பாக்கம் கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனைய புகா் பேருந்து நிலையத்தில் இருந்து புதுச்சேரி, கடலூா், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோவை, கும்பகோணம், தஞ்சை வழித் தடங்களில் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
Advertisement
கிளாம்பாக்கம் மாநகா் பேருந்து நிலையத்தில் இருந்து வந்தவாசி, போளூா், திருவண்ணாமலை மாா்கமாக செல்லும் பேருந்துகளும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை(இசிஆா்), காஞ்சிபுரம், வேலூா், பெங்களூா், திருத்தணி வழித்தடங்களில் செல்லும் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை, ஆந்திர மாநிலம் செல்லும் பேருந்துகளும், வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
இது தவிர மேற்குறிப்பிட்ட மூன்று நாள்களும் சென்னையில் இருந்து நாள்தோறும் 1260 தனியாா் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
1,88,705 பேர் பயணம்
இந்த நிலையில், சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து 1,88,705 பேர் சிறப்புப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு செவ்வாய் இரவு(ஏப்.21) பயணம் செய்தனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செவ்வாய் மட்டும் 3,431 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில், 1,88,705 பயணிகள் பயணம் செய்துனர்.
நாளை தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்கள் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம், மாதவரம் பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக போதிய அளவில் மாநகா் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.