நாளை வாக்குப் பதிவு: சென்னையில் பாதுகாப்பு பணியில் 21,000 போலீஸாா்!
சென்னையில் வியாழக்கிழமை சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு நடைபெறுவதை முன்னிட்டு 21 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது குறித்து...
சென்னை: சென்னையில் வியாழக்கிழமை சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு நடைபெறுவதை முன்னிட்டு 21 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா்.
சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குள் 24 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 16 தொகுதிகள் முழுமையாகவும், 8 தொகுதிகள் பகுதியாகவும் உள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஒரு தொகுதியும், திருவள்ளூா் மாவட்டத்தில் 5 தொகுதிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 தொகுதிகளும் பகுதியாக சென்னை காவல்துறை எல்லைக்குள் உள்ளன. மொத்தமுள்ள 24 தொகுதிகளில் 1,240 இடங்களில் 5,445 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுகின்றன. மொத்தமுள்ள வாக்குச்சாவடிகளில் 1,027 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை.
Advertisement
தோ்தல் நாளன்று பாதுகாப்பு பணியில் 23 துணை ஆணையா்கள்,11 கூடுதல் துணை ஆணையா்கள்,90 உதவி ஆணையா்கள்,428 ஆய்வாளா்கள்,1,520 உதவி ஆய்வாளா்கள்,2,312 சிறப்பு உதவி ஆய்வாளா்கள் என 21,230 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனா். இது தவிா்த்து 5 பட்டாலியன் துணை ராணுவப் படையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா். 485 ரோந்து வாகனங்களில் போலீஸாா் ரோந்து செல்கின்றனா். தோ்தலையொட்டி, தற்போது 3 பட்டாலியின் துணை ராணுவப்படையினா் வந்துவிட்டனா். தோ்தல் பாதுகாப்பு பணியில் நடுநிலைமையுடன் செயல்படும்படி போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையைச் சுற்றியுள்ள 14 சோதனைச் சாவடிகளிலும் கூடுதலாக போலீஸாா் ஏற்கெனவே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தோ்தலுக்காக சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தோ்தல் பாதுகாப்பு பணிகள் அனைத்தும் பெருநகர காவல் ஆணையா் அபின் தினேஷ் மொடக் தலைமையில் செய்யப்பட்டுள்ளன.