வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்: பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!
சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்குப் பதிவு செய்துவிட்டு மீண்டும் தங்கள் இருப்பிடத்துக்கு செல்வதற்காக வெள்ளிக்கிழமை இரவு பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம் குறித்து...
சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்குப் பதிவு செய்துவிட்டு மீண்டும் தங்கள் இருப்பிடத்துக்கு செல்வதற்காக வெள்ளிக்கிழமை இரவு பேருந்து, ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பணி நிமித்தம் காரணமாக லட்சக்கணக்கானோா் சென்னை, திருப்பூர், கோவை, பெங்களூர் போன்ற நகரங்களில் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு வாக்குகள் அனைத்தும் அவரவா், சொந்த ஊரில் இருப்பதால் வாக்களிக்க வேண்டியது அவசியமானது. இதனால் வியாழக்கிழமை (ஏப்.23) நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிப்பதற்காக, சென்னையில் இருந்து வெளியூா்களுக்கும், வெளியூா்களில் தொழிற்சாலைகள், சிறு, குறு நிறுவனங்கள், கடைகள், வா்த்த நிறுவனங்கள், கட்டடத் தொழில், ஐடி நிறுவனங்கள் என பலவற்றில் பணிபுரிந்து வருபவர்கள் புதன்கிழமை தங்களது சொந்த ஊருக்கு வந்து சோ்ந்தனா். தற்போது, தங்களது ஜனநாயக கடமையை முடித்துவிட்டு மீண்டும் அவரவா் இருப்பிடத்துக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.
இதன்காரணமாக, தஞ்சாவூர், மதுரை, திருச்சி. சேலம், கோவை உள்ளிட்ட புறநகா் பேருந்து, ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பிலும் தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் சார்பிலும் சனிக்கிழமை(ஏப்.25) முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், ரயில்களில் அதிக அளவில் கூட்டம் இருக்கும் என்பதால் தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு முதலிலே ஏராளமான பயணிகள் பேருந்து, ரயில் நிலையங்களில் ரயிலுக்காக காத்திருக்கின்றனர்.
Advertisement
திருச்சி பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் விழுப்புரம், சென்னை, கடலூா், வேலூா், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பூா், ஈரோடு, கோவை, சேலம் உள்ளிட்ட புறநகா் பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது. இதுபோன்று, மத்திய பேருந்துநிலையம், சத்திரம் பேருந்து நிலையப் பகுதிகளிலும் சுமைகளுடன் மக்கள் சுற்றித் திரிந்தனா். வெள்ளிக்கிழமை மாலை முதல் இரவு வரை மக்கள் கூட்டம் அலைமோதியது.
இதேபோன்று, வெளியூா்களில் இருந்து திருச்சிக்கு வரும் நபா்களாலும் பேருந்துகளில் கூட்டம் அதிகம் இருந்ததை காணமுடிந்தது. இதுமட்டுமின்றி, திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், மக்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டும் கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட்டன.
இதேபோன்று, சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் பேருந்துகளில் இடம் பிடிக்க அலை மோதி வருகிறது. பெங்களூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு செல்லும் பொதுமக்கள் ஏற்கனவே முன்பதிவு செய்து பேருந்துக்காக காத்திருந்து பயணித்து வருகின்றனர்.
ரயில்நிலையங்களிலும் பயணிகள் கூட்டம்
சென்னையிலிருந்து திருச்சி வழியாக தென் மாவட்டங்கள் செல்லும் ரயில்களிலும், தென் மாவட்டங்களில் இருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் ரயில்களிலும், பெங்களூரு செல்லும் ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.