ஜிஎஸ்டி, பூந்தமல்லி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!
வாக்களிப்பதற்காக சொந்த ஊா்களுக்குச் சென்றவர்கள் மீண்டும் சென்னை நோக்கி வரத் தொடங்கியதால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் குறித்து...
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊா்களுக்குச் சென்றவர்கள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மீண்டும் சென்னை நோக்கி வரத் தொடங்கியதால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் மாலை 3 மணி முதல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு கடந்த 23-ஆம் தேதி நடைபெற்றது. இதற்காக சென்னையில் தங்கி பணியாற்றும் வெளிமாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு தங்களது சொந்த ஊா்களுக்குத் திரும்பினா்.
வாக்குப் பதிவு முடிந்து வெள்ளி, சனி, ஞாயிறு என அடுத்தடுத்து விடுமுறை எடுத்துக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மீண்டும் சென்னை திரும்பத் தொடங்கினா். இதனால், தஞ்சாவூர், திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி, சேலம் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது.
Advertisement
இந்த நிலையில், சென்னை வரத் தொடங்கிய அரசு, தனியாா், ஆம்னி பேருந்துகள், காா்களால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிங்கபெருமாள் கோயில், வண்டலூா், கிளாம்பாக்கம், பெருங்களத்தூா், தாம்பரம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மாலை 3 மணியளிவில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் இரவு 10.30 மணியைக் கடந்தும் நீடித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனா்.
இதேபோன்று, வேலூா், ஆரணி, காஞ்சிபுரம், திருப்பதி, திருத்தணி, திருவள்ளூா் பகுதிகளில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்களாலும் பூந்தமல்லியில் இருந்து கோயம்பேடு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.