தஞ்சையில் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கி மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் கிறிஸ்தவர்கள்- இஸ்லாமியர்கள்!
தஞ்சையில் பக்தர்களின் தாகத்தை தீர்க்க தெற்கு வீதியில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து நீர்மோர் வழங்கி வரும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவினர் குறித்து...
தஞ்சை பெருவுடையார் கோயில் திருத்தேரோட்டத்தை காண வந்த பக்தர்களின் தாகத்தை தீர்க்கும் விதமாக தெற்கு வீதியில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து நீர்மோர் பானகம், பழரசம் வழங்கி மத நல்லிணக்கத்தை பறைசாற்றி வருகின்றனர்.
உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலின் சித்திரைத் திருவிழா ஏப்.13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. இந்த விழாவின் 15-ஆம் திருநாளான திங்கள்கிழமை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தியாகராஜா - பெருவுடையாரே என்ற பக்தி கோஷத்துடன் திருத்தோ் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். திருத்தேர் நிலையில் இருந்து புறப்பட்டு ராஜ வீதிகளில் வலம் வருகின்றது.
கடுமையான வெயில் காலம் என்பதால் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அன்னதானம் ஆகியவை பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
Advertisement
திருத்தேர் நிலையில் இருந்து புறப்பட்டு ராஜ வீதிகளில் வலம் வருவதை தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடும் வெயில் நிலவி வருவதால் பக்தர்களின் தாகத்தை தீர்க்க தஞ்சை தெற்கு வீதியில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து நீர்மோர் பானகம், பழரசம் ஆகியவை வழங்கி வருகின்றனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று நீர்மோர் வாங்கி பருகி செல்கின்றனர்.
சாதி, மதம், மொழி கடந்து மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் இந்த நிகழ்வு பல்வேறு தரப்பினரின் பாராட்டைப் பெற்றுள்ளது.