வீட்டின் பாதுகாப்பில் தொழில்நுட்பத்தின் பங்கு! அறிவது அவசியம்
வீட்டின் பாதுகாப்பில் தொழில்நுட்பத்தின் பங்கு குறித்து மக்கள் அறிவது அவசியம்
வீட்டை 24 மணி நேரமும் நாம் நேரடியாகக் கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது. எனவே, புதிய நவீன தொழில்நுட்பங்கள் பற்றி அறிந்துகொண்டு பலரும் அதனை பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.
டைமர் தொழில்நுட்பத்துடன் இயங்கும் மின் விளக்குகள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன.
வீட்டில் ஆள்கள் இல்லாத நேரங்களில், மாலை நேரத்தில் டைமர் தொழில்நுட்பம் கொண்டு வீட்டில் உள்ள மின் விளக்குகளை எரிய விடலாம்.
Advertisement
வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி போன்றவற்றையும் டைமர் தொழில்நுட்பம் மூலம் மாலை அல்லது இரவில் சிறிது நேரம் இயக்கி அணைக்கும் தொழில்நுட்பத்தின் மூலம் இயக்கலாம். இது வீட்டில் ஆள்கள் இருப்பது போன்ற தோற்றத்தைக் கொடுக்கும்.
சொந்த வீடாக இருந்தால் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வீட்டின் மதில் சுவர்களை யாரேனும் தொட்டால் அலாரம் அடிக்கும் வசதிகளை ஏற்படுத்தலாம்.
வீட்டில் கண்காணிப்புக் கேமரா அல்லது அலாரம் போன்றவை பழுதானால் உடனடியாக சரி செய்யவும். பழைய கேமரா அல்லது அலாரம் போன்றவற்றை மாற்றி புதுப்பித்துக் கொள்ளுங்கள்.
தற்போது, கண்காணிப்புக் கேமராக்கள் குரல் பதிவுடன் வருகின்றன. அவற்றை வீட்டின் பின்புறம், பாதுகாப்பற்ற இடங்களில் பொருத்திக் கொள்ளலாம்.
ஒருவேளை, பூட்டின் ஒரு சாவி தொலைந்துவிட்டால், உடனடியாக அந்த பூட்டை மாற்றிவிடுங்கள். அதனை வெளிக் கதவுக்குப் பயன்படுத்த வேண்டாம்.
வசதி உள்ளவர்கள் வீட்டைச் சுற்றி மரங்கள் வளர்க்கலாம். அது வீட்டை வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு மறைப்பாக இருக்கும். ஆனால், மரங்கள் வழியாக வீட்டுக்குள் நுழையாத வகையில் மரங்கள் இருப்பதும் நல்லது.
அஞ்சல்பெட்டியில் யாரும் முழுப் பெயரை பதிவு செய்ய வேண்டாம். பெயரை அறிந்துகொண்டு மோசடியாளர்கள் நன்கு தெரிந்தவர் போல வீட்டுக்குள் நுழையும் அபாயம் உள்ளது.
வண்டி நின்றுவிட்டது என்று கூறி, வீட்டுக்கு வந்து மெக்கானிக்கை அழைக்க வேண்டும் என்று யாராவது செல்போன் கேட்டால், கேட்டை திறக்காமல், அவர் சொல்லும் எண்ணுக்கு நீங்களே அழைப்பை மேற்கொள்ளலாம்.
முழுக்க முழுக்க கண்ணாடிகளைக் கொண்ட ஜன்னல்களைப் பொருத்தாமல் இடையே கம்பிகளைக் கொண்டு ஜன்னல்கள் இருப்பது நல்லது.
சேதமடைந்த ஜன்னல்களை உடனடியாக மாற்றுங்கள். அலட்சியம் வேண்டாம்.