முகப்பு
அழகே அழகு

முகப்பருக்களால் ஏற்பட்ட வடுக்கள்  தழும்பாக மாறி வாட்டுகிறதா?

முகத்தில் பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மாறாத தழும்பாக இருந்து வாட்டுகிறதா?

Updated On : 30 அக்டோபர், 2017 at 1:39 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:29 PM

முகத்தில் பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மாறாத தழும்பாக இருந்து வாட்டுகிறதா? ஆரஞ்சு தோல் அரைத்த விழுது கால் டீஸ்பூன், சந்தனப்பவுடர் - 2 சிட்டிகை இவற்றை கெட்டியான விழுதாக்கிக் கொள்ளுங்கள். தினமும் இரவு தூங்கப்போகும்போது பருக்கள் வந்த இடத்தில் மூடுவது போல் பூசுங்கள். காய்ந்ததும் முகத்தை கழுவி விடுங்கள். இந்த சிகிச்சையால் வடு மறைவதுடன் பருக்களும் இனி உங்கள் முகத்தை எட்டிப்பார்க்காது.

கண்களைச் சுண்டி இழுக்கும் வசீகரமான ஆரஞ்சு பழம். நம் தேகத்துக்கும் வசீகரத்தை அள்ளித் தரக்கூடியது. அவற்றில் சில...

கண்கள் ‘ப்ளிச்' ஆக, ஆரஞ்சு ஜுஸை ஃப்ரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள். இதை வெள்ளைத் துணியில் சுற்றி கண்ணுக்கு மேல் ஒத்தி எடுங்கள். ஒருநாள் விட்டு ஒருநாள் இப்படி செய்து வர கண்கள் ப்ளிச் ஆகிவிடும். தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி பிரகாசமாக்கவும் ஆரஞ்சு பயன்படுகிறது.

Advertisement

உலர்ந்த ஆரஞ்சு தோல், துண்டுகளாக்கிய வெட்டிவேர், பூலான்கிழங்கு, கடலை பருப்பு, பயத்தம் பருப்பு, கசகசா இவை ஒவ்வொன்றும் தலா 100 கிராம் எடுத்து மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரை வாரத்திற்கு ஒருமுறை தலைக்கு தேய்த்து குளியுங்கள். இப்படி செய்து வந்தால் முடி பளபளப்பாகவும் வாசனையாகவும் இருக்கும். இதையே உடம்புக்கு தேய்த்துக் குளிக்கும் வாசனை பவுடராகவும் பயன்படுத்தலாம்.

சிலருக்கு கண்களுக்குக் கீழ் இரண்டு கன்னப் பகுதியிலும் கருமை படர்ந்து திட்டுத்திட்டாக இருக்கும் அதற்கு, வேப்பங்கொழுந்துடன், ஆரஞ்சு தோல் விழுது கால் டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் கால் டீஸ்பூன் கலந்து எங்கெல்லாம் கருமை படர்ந்து இருக்கிறதோ அங்கெல்லாம் பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். கருமை மறைந்து முகம் பளபளப்பாகும்.

தலை எப்போதும் சுத்தமாக இல்லாவிட்டால் அது குப்பை கூடையாகி அரிப்பு ஏற்படும். இந்த அரிப்பை அடியோடு அகற்றுகிறது ஆரஞ்சு மசாஜ் சிகிச்சை. உலர்ந்த ஆரஞ்சு தோல் 100 கிராம், வெந்தயம் 100 கிராம், பிஞ்சு கடுக்காய் 10 கிராம், வால் மிளகு 10 கிராம், பச்சை பயறு கால்கிலோ எல்லாவற்றையும் கலந்து அரைத்து கொள்ளுங்கள். இதை வாரம் இருமுறை தலையில் நன்றாக தேய்த்துக் குளியுங்கள். அரிப்பு போவதுடன் சுத்தமும் வாசனையுமாகக் கூந்தல் பளபளக்கும்.

வெளி தூசுகளால் முகம் சிலருக்கு களையிழந்து காணப்படும். அவர்களின் முகத்தில் ஒளியேற்ற இதோ ஆரஞ்சு ஃப்ரூட் பேக்.

ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் ஒரே அளவு எடுத்து தயிருடன் கலந்து முகத்துக்கு பேக்போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் ஒருமுறை இதை முகத்துக்கு போட்டு வர பேஷியல் செய்தது போன்று முகம் பிரகாசமாக ஜொலிக்கும். தயிருக்குப் பதிலாக ஆரஞ்சு ஜுஸையும் பயன்படுத்தலாம்.

‘அழகு உங்கள் கையில்' நூலிலிருந்து

- சி. ஜெயலட்சுமி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.