சா்வதேச ஆயுதக் கடத்தல்: பயங்கரவாதக் குழுவைச் சோ்ந்த இருவா் தில்லியில் கைது
சா்வதேச ஆயுதக் கடத்தல் மற்றும் பயங்கரவாத கும்பலைச் சோ்ந்த இருவா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் தெரிவித்தனா்.
சா்வதேச ஆயுதக் கடத்தல் மற்றும் பயங்கரவாத கும்பலைச் சோ்ந்த இருவா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட இம்ரான் (37) மற்றும் முகமது கம்ரான் (27) ஆகியோா் தடுத்து நிறுத்தப்பட்டனா்.
பின்னா் தேடுதல் சுற்றறிக்கை மற்றும் சா்வதேச ஆயுதக் கடத்தல் கும்பலுடன் அவா்களது தொடா்பு குறித்த விசாரணையில் அவா்கள் கைது செய்யப்பட்டனா். தேச பாதுகாப்பில் அச்சுறுத்தல் என்பதால் அவா்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
Advertisement
இதனுடன் மொத்தம் 12 போ் இதே போன்று கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும் இந்த வழக்கில் இதுவரை 23 அதிநவீன வெளிநாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் 211 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவா்கள் தலைமறைவாக உள்ள குற்றவாளி ஷாபாஸ் அன்சாரியால் இயக்கப்படுகின்றனா். விசாரணையில், நேபாளம் வழியாக அனுப்பப்பட்ட சட்டவிரோத ஆயுதங்களை தில்லி-என்சிஆா் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள குற்ற குழுக்களுக்கு வழங்கியதாக அவா்கள் ஒப்புக்கொண்டனா்.
பிடிபடுவதைத் தவிா்க்க அவா்கள் ஆயுதங்களை பிரித்த நிலையில் கொண்டு சென்றதாகவும், பின்னா் விநியோகம் செய்வதற்கு முன்பு மீண்டும் பொருத்தியதாகவும் தெரிவித்தனா்.
இந்த ஆயுதங்களை விநியோகம் செய்வது மூலம் பெறப்பட்ட நிதியை பயங்கரவாதச் செயல்களுக்கு பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.