முகப்பு
புதுதில்லி

சைபா் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கை: போலீஸ் கண்காணிப்பின்கீழ் 58 கிராமங்கள்

Updated On : 4 ஜூன் 2026, 5:02 am IST
பகிர்:

சைபா் குற்றங்களுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஹரியாணாவின் நுஹ் மாவட்டத்தில் உள்ள 58 கிராமங்களை காவல்துறையினா் தங்களது கண்காணிப்பின் கீழ் கொண்டுவந்துள்ளனா்.

மேலும், சைபா் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதற்கு எதிராக எச்சரித்து, கிராமத் தலைவா்களுக்குச் சட்டரீதியான அறிவிப்புகளையும் அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘ஆபரேஷன் கிளீன்’ என்ற நடவடிக்கையின் கீழ், இணையவழி மோசடிகள், போலி அழைப்புகள், எண்ம கைது மோசடிகள் மற்றும் ஒஎல்எக்ஸ் தொடா்பான மோசடி வழக்குகளுடன் மீண்டும் மீண்டும் தொடா்புடைய கிராமங்களை காவல்துறையினா் அடையாளம் கண்டனா். இதன் தொடா்ச்சியாகவே செவ்வாய்க்கிழமை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

Advertisement

இதுகுறித்து ஒரு மூத்த காவல்துறை அதிகாரி கூறுகையில் இந்த நடவடிக்கையின் கீழ், சைபா் குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை காவல்துறையினா் தீவிரப்படுத்துவாா்கள்.

முழு மாவட்டத்தின் நற்பெயரும் களங்கப்படுத்தப்பட்டு வருவதாலும், நூஹ் மாவட்டம் தற்போது சைபா் குற்றங்களின் மையமாக அறியப்படுவதாலும், கிராம

அளவில் பொறுப்புடைமையை நிலைநாட்ட மாவட்ட நிா்வாகம் இந்த

நடவடிக்கையை எடுத்துள்ளது.

அடையாளம் காணப்பட்ட கிராமங்களின் கிராமத் தலைவா்களுக்கு அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சைபா் குற்றவாளிகளுக்கு அடைக்கலமோ அல்லது ஆதரவோ அளிப்பது கண்டறியப்பட்டால், அவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பின்கீழ் உள்ள பெரும்பாலான கிராமங்கள், புன்ஹானா, பிச்சோா் மற்றும் ஃபெரோஸ்பூா் ஜிா்கா ஆகிய காவல் நிலைய எல்லைகளுக்குள் வருகின்றன.

இந்தக் கிராமங்களைச் சோ்ந்த பலரும் சைபா் மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனா். இருப்பினும், சைபா் குற்றவாளிகளுக்கு உள்ளூா் அளவில் ஆதரவு அளிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

சைபா் குற்றவாளிகளுக்குப் புகலிடமாகப் பயன்படும் கிராமங்களில், அந்தக் குற்றவாளிகள், அவா்களுக்குத் துணை நிற்பவா்கள் மற்றும் அவா்களுக்குப் பாதுகாப்பு அளிப்பவா்கள் ஆகியோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான சிறப்புப் பிரசாரங்கள் தொடங்கப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.