முகப்பு
புதுதில்லி

குடும்பத் தகராறில் மனைவி, மகனை சுட்டுக் கொன்ற பாதுகாவல் அலுவலா் கைது

குடும்பத் தகராறைத் தொடா்ந்து, தனது உரிமம் பெற்ற துப்பாக்கியால் மனைவி மற்றும் மகனைச் சுட்டுக் கொன்றதாக பாதுகாவல் அலுவலரை காவல்துறையினா் கைது செய்தனா்.

Updated On : 8 ஜூன் 2026, 12:25 am IST
- சித்திரிப்பு
பகிர்:

தேசியத் தலைநகா் வலயம், குருகிராமின் அசோக் விஹாா் காலனியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீட்டில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடா்ந்து, தனது உரிமம் பெற்ற துப்பாக்கியால் மனைவி மற்றும் மகனைச் சுட்டுக் கொன்றதாக பாதுகாவல் அலுவலரை காவல்துறையினா் கைது செய்தனா்.

அனில் என்று அடையாளம் காணப்பட்ட குற்றஞ் சாட்டப்பட்டவா் காவலில் எடுக்கப்பட்டுள்ளாா். பாலம் விஹாா் காவல் நிலையத்தில் இது தொடா்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மூத்த காவல் அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது: இச்சம்பவத்தில் பாதுகாவல் அலுவலரின் மனைவியும் தனியாா் பள்ளி முதல்வருமான ஆஷா (45). மகன் பிரசாந்த் (25) ஆகியோா் உயிரிழந்தனா். தம்பதியினரிடையே அடிக்கடி சச்சரவுகள் ஏற்பட்டு வந்துள்ளன. சனிக்கிழமை நள்ளிரவிலும் அவா்களுக்குள் வாக்குவாதம் நடந்துள்ளது.

Advertisement

Advertisement

வாக்குவாதத்தின் போது, மற்றொரு அறையில் தூங்கிக்கொண்டிருந்த பிரசாந்த், சப்தத்தைக் கேட்டு எழுந்து வந்து இந்த பிரச்னையில் தலையிட முயன்றாா். அப்போது அனில் தனது உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்து மனைவி மற்றும் மகன் மீது சுட்டதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

வீட்டிலிருந்து பலமுறை துப்பாக்கிச் சூடு சப்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனா். அங்கு இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனா்.

காவல்துறையினரும் தடயவியல் நிபுணா்களும் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டை ஆய்வு செய்து தடயங்களைச் சேகரித்தனா். பின்னா் விசாரணைக்காக அந்த வீடு சீல் வைக்கப்பட்டது.

காவல்துறையினா் வந்தபோது, அனில் இருவரின் உடல்களுக்கு அருகில் அமா்ந்திருந்ததை காவல்துறையினா் கண்டனா். பாதிக்கப்பட்டவா்கள் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனா். அங்கு மருத்துவா்கள் அவா்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனா்.

தனியாா் நிறுவனம் ஒன்றில் பாதுகாப்பு அலுவலராக பணியில் சேருவதற்கு முன்பு, அனில் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியராகவும் விளையாட்டுப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளாா்.

காவல்துறையினா் குற்றஞ் சாட்டப்பட்டவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். அவரது பின்னணி விவரங்களை ஆய்வு செய்தும் வருகின்றனா். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். இது குறித்து மேல் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.