பாஜகவை போல் ஆம் ஆத்மி கட்சியும் மலிவான அரசியல்: தேவேந்தா் யாதவ் சாடல்
நமது நிருபா்
மாநிலங்களவை எம். பி. சந்தீப் பதக்கை கைதுசெய்ய பஞ்சாப் காவல்துறையை தில்லிக்கு அனுப்பி தனது அரசியல் எதிரியை பழிவாங்குவதற்காக பாஜகவைப் போலவே மலிவான அரசியலை ஆம் ஆத்மி கட்சி பின்பற்றுகிறது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவா் தேவேந்தா் யாதவ் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
Advertisement
Advertisement
பதக் சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியை விட்டு வெளியேறி 6 ஆம் ஆத்மி மாநிலங்களவை எம். பி. க்களுடன் பாஜகவில் இணைந்தாா். அவா் மீது இரண்டு எஃப். ஐ. ஆா்.கள் பதிவுசெய்யப்பட்ட பின்னா் பஞ்சாப் காவல்துறை தில்லிக்கு வந்தது. ஆனால், பதக் தான் கைது செய்யப்படுவதை தவிா்க்க தலைமறைவாகிவிட்டாா்.
சந்தீப் பதக் கைது நாடகத்தின் மூலம், கேஜரிவால் கட்சி பாஜகவைப் போலவே காவல்துறையையும் பிற விசாரணை நிறுவனங்களையும் தவறாகப் பயன்படுத்தி அதிகாரத்தில் நிலைத்திருக்க முடியும் என்பதைக் காட்டியுள்ளது.
ஏனெனில், 7 முக்கிய ஆம் ஆத்மி எம். பி. க்கள் பாஜகவில் இணைந்தது ஆம் ஆத்மிக்கு பெரும் அடியாகும். கேஜரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா போன்ற ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா்கள் பஞ்சாப் அரசாங்கத்தின் செலவில் அனைத்து வசதிகளையும் அனுபவிக்க பஞ்சாபில் முகாமிட்டுள்ளனா்.
ஆனால், ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்த ஏழு எம். பி. க்கள் வெளியேறியிருப்பது, அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி பஞ்சாபைக் கொள்ளையடிப்பதில் கேஜரிவால் அண்ட் கம்பெனியின் திட்டங்களை அம்பலப்படுத்தியுள்ளது.
ஊழல் மிகுந்த மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது தொடா்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபோது கேஜரிவால், தான் பாதிக்கப்பட்டவா் போல நாடகமாடினாா். ஒரு காலத்தில் தனது நெருங்கிய கூட்டாளியும் மூலோபாயவாதியுமான சந்தீப் பதக்கிற்கு எதிராக அதே பாஜக நாடகத்தை இப்போது கேஜரிவால் நடத்துகிறாா் என்றாா் தேவேந்தா் யாதவ்.