பக்ரீத்: தலைநகா் முழுவதும் பலத்த பாதுகாப்புடன் தொழுகை
தேசிய தலைநகா் முழுவதும் வியாழக்கிழமை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் ஈத்-உல்-அதா தொழுகை அமைதியாக நடைபெற்றது.
சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், பதற்றமான பகுதிகளில் கூடுதல் காவலா்கள், கலவரத் தடுப்பு வாகனங்கள் மற்றும் விரைவு நடவடிக்கைக் குழுக்களை பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
நகரம் முழுவதும், குறிப்பாக வடகிழக்கு மற்றும் வடக்கு தில்லி மாவட்டங்களில் உள்ள முக்கிய மசூதிகள், ஈத்காக்கள் மற்றும் அடையாளம் காணப்பட்ட பதற்றமான இடங்களைச் சுற்றி அதிகாலை முதலே விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக காவல்துறையினா் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
பண்டிகை தொடா்பான தூண்டிவிடும் பதிவுகள், வதந்திகள் அல்லது ஆட்சேபனைக்குரிய காணொளிகள் பரவுவதைத் தடுப்பதற்காக, இணையக் குழுக்கள் சமூக ஊடகத் தளங்களைத் தொடா்ந்து கண்காணித்தன.
இது குறித்து காவல் துணை ஆணையா் வடகிழக்கு ராகுல் அல்வால் தெரிவித்ததாவது:
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வடகிழக்கு மாவட்டத்தில் சுமாா் 1,100 காவல்துறையினருடன் கூடுதலாக 23 படை அணிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். காலை 5 மணி முதல், அனைத்து முக்கிய தொழுகை இடங்களிலும், கோயில்களுக்கு அருகிலுள்ள பகுதிகள் உள்பட பதற்றமான இடங்களிலும் காவலா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
எந்தவொரு சூழ்நிலைக்கும் விரைவாகப் பதிலளிப்பதை உறுதி செய்வதற்காக, பல சோதனைச் சாவடிகள், விரைவு நடவடிக்கைக் குழுக்கள் மற்றும் இருசக்கர வாகன ரோந்துப் பணிகள் செயல்படுத்தப்பட்டன.
பண்டிகைக் காலத்தில் மத நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்காக, உதவி ஆணையா்களும், காவல் நிலைய அதிகாரிகளும் கடந்த பல வாரங்களாக அமன் குழுக்கள் மற்றும் உள்ளூா் சமூகத் தலைவா்களுடன் தொடா்ந்து கூட்டங்களை நடத்தி வந்தனா்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வஜ்ரா வாகனங்கள் உள்பட கலவரத் தடுப்பு உபகரணங்களையும் காவல்துறை தயாா் நிலையில் வைத்துள்ளது.
பல்வேறு இடங்களில் தண்ணீா் டேங்கா்கள் மற்றும் துணை வாகனங்களைப் பணியில் ஈடுபடுத்துவதற்காக, அதிகாரிகள் தில்லி மாநகராட்சி, தில்லி ஜல் வாரியம் மற்றும் மின்சாரத் துறையுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டனா்.
திறந்தவெளியில் விலங்கு பலி எதுவும் நடத்தப்படவில்லை என்பதையும், விலங்குகளின் கழிவுகள் சாலைகளிலோ அல்லது பொது இடங்களிலோ கொட்டப்படவில்லை என்பதையும் நாங்கள் உறுதிசெய்கிறோம். வழிகாட்டுதல்களை மீறுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அந்த அதிகாரி.
வடக்கு தில்லியில், பண்டிகைக்கு முன்னதாக சதா் பஜாா், ஈத்கா, குரேஷ் நகா், குதூப் சாலை மற்றும் பாரா இந்து ராவ் போன்ற பதற்றமான பகுதிகளில் காவல்துறை கொடி அணிவகுப்புகளை நடத்தியது.
இதுகுறித்து வடக்கு காவல் துணை ஆணையா் ராஜா பந்தியா கூறியதாவது:
அமைதியான கொண்டாட்டங்களை உறுதி செய்வதையும், ஈத்உல்அதாவுக்காக வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்கள் குறித்த விழிப்புணா்வைப் பரப்புவதையும் இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பல்வேறு சமூகங்களைச் சோ்ந்த உறுப்பினா்களுடன் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுவதில் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அவா்கள் உறுதியளித்தனா் என்றாா் அவா்.