நாவல் வடிவில் காளிதாசரின் சாகுந்தலம்
சாகுந்தலத்தின் மூல வடிவை வாசித்தவர்களுக்கு இந்த நாவல் ஒரு புதிய அனுபவத்தைத் தரும்; சாகுந்தலத்தை இதுவரை வாசிக்காதவர்களுக்கு காளிதாசரின் மூல படைப்பைத் தேடி வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் இருக்கிறது நாவலாசிரியரின் எழுத்தாளுமை.
நாவல் வடிவில் காளிதாசரின் சாகுந்தலம்-கே.ஜி. ஜவர்லால்; பக்.144; ரூ. 170; சுவாசம் பதிப்பகம், சென்னை-600 127, ✆ 81480 66645.
காளிதாசரின் ஆகச்சிறந்த படைப்பான 'அபிஞான சாகுந்தலம்' (சாகுந்தலம்) என்பது சம்ஸ்கிருத இலக்கியத்தின் ஒரு மைல் கல்லாகும். இது துஷ்யந்த மன்னனுக்கும் சகுந்தலைக்கும் இடையிலான காதலைச் சொல்லும் ஓர் உயர்ந்த நாடகக் காப்பியம். நாடக வடிவிலான இலக்கியப் படைப்பை நாவல் வடிவில் ஆக்கித் தந்திருக்கிறார் நூலாசிரியர்.
காளிதாசரை 'உபமா காளிதாச' (உவமைக்கு காளிதாசன்) என்று புகழ்வதுண்டு. ஆரம்பம் முதலே இந்த நாவலை வாசிக்கும்போது நாம் காளிதாசரின் கதாபாத்திரங்கள் உலாவிய வனப் பகுதிக்கும், ரிஷி பூமிக்கும் பிரவேசிக்கும் உணர்வைப் பெறுகிறோம். 'மனதுக்குப் பட்டதை மறைக்காமல் வெளிப்படையாக பேசுகிறவர்கள் நம்பிக்கைக்கு உகந்தவர்கள்; வலிமையும் வீரமும் இருக்கிறவர்கள் பணிவது அவர்களுக்கு மிகுந்த மேன்மையைத் தரும்' உள்ளிட்ட வாழ்வியலுக்குத் தேவையான கருத்துகள் கதாபாத்திரங்கள் வழியே நமக்குக் கிடைக்கின்றன.
Advertisement
காடு, காட்டில் உள்ள மரங்கள், நீரோடைகள், செடி- கொடிகள் அதில் உள்ள மரங்கள், பறவைகள், சாதுவான விலங்குகள் என ஒரு மென்மையான ரசனை மிகுந்த சூழலில் பேரழகுள்ள ஒரு பெண் தன் தோழிகளுடன் பேசிக் கொண்டிருப்பதையும், அதைப் பார்த்து துஷ்யந்தன் மனம் லயிப்பதுமான காட்சியை விளக்கும்போது நாமும் அவர்களுள் ஒருவராகி விடுகிறோம்.
சாகுந்தலத்தின் மூல வடிவை வாசித்தவர்களுக்கு இந்த நாவல் ஒரு புதிய அனுபவத்தைத் தரும்; சாகுந்தலத்தை இதுவரை வாசிக்காதவர்களுக்கு காளிதாசரின் மூல படைப்பைத் தேடி வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் இருக்கிறது நாவலாசிரியரின் எழுத்தாளுமை.