திட்டம் 6
மனிதர்களின் வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் அடிப்படையாக இருக்கும் இந்த ஆறாம் அறிவே, அவர்களின் பிரச்னைக்கும், வீழ்ச்சிக்கும் வழிவகுப்பதாக இருப்பதை நாவல் சுட்டிக்காட்டுகிறது.
திட்டம் 6- சோம வள்ளியப்பன்; பக். 176; ரூ. 250; ஸ்நேகா, சென்னை- 600 063, ✆ 98409 69757.
தன்னைத் தானே செதுக்கிக் கொள்ளும் சிலை போல், தனக்கிருக்கும் ஆறாம் அறிவால் மனிதன் தனது வாழ்வியலை தானே வழிநடத்திக்கொள்கிறான். அத்தகைய ஆறாம் அறிவால் ஏற்பட்டுள்ள சாதக, பாதகங்களை சுவாரஸ்யமாக விவாதிக்கிறது இந்த நாவல். இதர உயிரினங்களுக்கு இல்லாமல், மனிதர்களுக்கு மட்டுமே இருக்கும் அந்த ஆற்றல் அவர்களிடத்தில் எந்த மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை நூலாசிரியர் அலசுகிறார். அதை விவாதிப்பவர்களாக அவர் எடுத்துக்கொண்ட கதாபாத்திரங்கள் சுவாரஸ்யத்தை கூட்டுகின்றன.
மனிதர்களின் வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் அடிப்படையாக இருக்கும் இந்த ஆறாம் அறிவே, அவர்களின் பிரச்னைக்கும், வீழ்ச்சிக்கும் வழிவகுப்பதாக இருப்பதை நாவல் சுட்டிக்காட்டுகிறது. தனிமனித பிரச்னைகளில் இருந்து, சமூக ரீதியிலான பிரச்னைகள் வரை அனைத்தும் விவாதிக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
நமக்கிருக்கும் இந்த அறிவால் முற்றிலும் நன்மையே என்று அதைத் தூக்கிப் பிடிக்காமல், முழுவதுமே தவறு என்று தரையிலும் வீசாமல், தராசில் அளப்பது போல் அவற்றை மதிப்பீடு செய்கிறது. ஒரு கலந்தாய்வுக் கூட்டத்தின் பாணியில் இருக்கும் இந்த நாவல், வரமாகவும், சாபமாகவும் இருக்கும் செயற்கை நுண்ணறிவு என்ற சமகால புள்ளியில் போய் நிற்கிறது.
நெருப்பு, சக்கரம், அறிவியல் கண்டுபிடிப்புகள் என படியேற்றிவிடும் அந்த அறிவே, போர், விபரீத முனைப்புகள், அபாயகரமான கண்டுபிடிப்புகள் என படுகுழியிலும் மனித குலத்தைத் தள்ளுவதை விவாதிக்கறது. எச்சரிக்கை மணியை ஒலிக்க விடும் இந்த நாவல், நாம் சந்திக்கும் பிரச்னைகளுக்கான தீர்வும் நம்மிடமே இருக்கிறது என்பதாக, அதற்கான வழியையும் பரிந்துரைக்கிறது. நாவலின் முடிவு, அதிலுள்ள கதாபாத்திரங்களைப் போலவே நம்மையும் புன்னகைக்க வைக்கிறது.