மானுடத்தின் முன்னோடி மீனவன்
மீனவர்களின் வழிபாட்டு முறைகள் கூறப்பட்டுள்ளன. 'சிந்தனை சிற்பி' சிங்காரவேலரின் வரலாற்றையும் பதிவு செய்திருக்கிறார்.
மானுடத்தின் முன்னோடி மீனவன்- புலவர் மு. சொக்கப்பன்; பக். 204; ரூ. 200; கலைச்செல்வி நூலகம், நாகப்பட்டினம்-611 001, ✆ 94435 29752.
மீனவர்களின் வாழ்வு குறித்து விரிவான நூலாக எழுதப்பட்டுள்ளது. கடல்-கடலோடிகள், நெய்தல் அது சார்ந்த மீனவர்களின் வாழ்க்கை, மீனவர்களின் இனப் பிரிவுகள், மீனவர்களுடைய இடர்கள் இன்னல்கள், மீன் வகைகள், மீன்களின் பயன்கள், மருத்துவ குணங்கள், கடலின் வெள்ள ஓட்டம் குறித்த குறிப்புகள் போன்றவை மீனவரல்லாத மக்களுக்கு புதிய தகவல்களாகும்.
புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் கடல் கொந்தளிப்பு, வாடைக்காற்று செய்யும் துயரம், கடல் வாணிபத்தைத் தொடங்கியவர்கள் மீனவர்களே என்பதற்கான சான்றுகள் என விரிந்து, இன்றைக்கு இலங்கைக் கடற்படையால் தொடர்ந்து தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் பெருத்த துயரம் என விரிவாக எழுதப்பட்டுள்ளது.
Advertisement
பூர்வகுடியான மீனவர்களை 'மானுடத்தின் முன்னோடி மீனவன்' என்ற தலைப்பில் நூலாக வெளிக்கொணர்ந்துள்ளார். இந்நூலின் வழியாக மீனவர்களின் தொன்மையை இலக்கணங்கள், சங்க இலக்கியங்கள், நீதி இலக்கியங்கள், புராணங்கள், வரலாறுகள் மூலம் நேர்த்தியாக நூலாசிரியர் மெய்ப்பித்துள்ளார்.
மீனவ இனப் பிரிவுகளை 'பரதவர்' என்னும் பொதுப் பெயரில் ஒருங்கிணைப்பது, பழங்குடியினப் பட்டியலில் ஏன் சேர்க்க வேண்டும் என்பதன் அரசியல் காரணங்கள், கடற்கரைப் பாதுகாப்பில் அலையாத்தி காடுகளின் பங்களிப்பு, அரசின் நலத் திட்டங்கள், மீனவர்களுக்கான கல்வித் தேவை, அரசு அதிகாரங்கள், மீனவ நல வாரியங்கள் அமைப்பதை வலியுறுத்தியும் எழுதியிருப்பது, அவர்களின் முன்னேற்றத்துக்கான ஈடுபாட்டைக் காட்டுகிறது.
மீனவர்களின் வழிபாட்டு முறைகள் கூறப்பட்டுள்ளன. 'சிந்தனை சிற்பி' சிங்காரவேலரின் வரலாற்றையும் பதிவு செய்திருக்கிறார்.