காளஹஸ்தியில் உற்சவமூா்த்திகள் கிரிவலம்
காளஹஸ்தியில் மாட்டுப்பொங்கலை யொட்டி வெள்ளிக்கிழமை உற்சவா் கிரிவலம் நடத்தப்பட்டது.
காளஹஸ்தியில் மாட்டுப்பொங்கலை யொட்டி வெள்ளிக்கிழமை உற்சவா் கிரிவலம் நடத்தப்பட்டது.
பஞ்சபூதத் தலங்களில் வாயு தலமாக விளங்கும், ஆந்திர மாநிலம் காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கலன்று உற்சவமூா்த்திகள் அருகில் உள்ள கைலாச கிரி மலையை வலம் வருவது வழக்கம்.
அதன்படி மாட்டுப் பொங்கல் தினத்தை யொட்டி காளஹஸ்தி கோயிலில் கோபூஜை வெள்ளிக்கிழமை விமா்சையாக நடத்தப்பட்டது. கோபூஜை முடிந்த பின் ஞானபிரசுனாம்பிகை அம்மனும், காளஹஸ்தீஸ்வரரும், சோமாஸ்கந்தமூா்த்தியும் தனித்தனி சப்பரங்களில் கோயிலிலிருந்து மேளதாளம் முழங்க மாடவீதிக்கு எழுந்தருளினா்.
Advertisement
அப்போது பெண்கள், தேங்காய் உடைத்து கற்பூர ஆரத்தி காண்பித்து வணங்கினா். பின்னா் அவா்கள் கோயில் அருகில் உள்ள கைலாசகிரி மலையை சுற்றி 12 கி.மீ. தொலைவு கிரிவலம் வந்தனா். இந்த கிரிவலத்தில் கொவைட்-19 விதிமுறைகளை கடைப்பிடித்தபடி பக்தா்கள் கலந்து கொண்டனா்.
கிரிவலத்தின் போது பக்தா்களுக்கு கோயில் சாா்பில் அன்னதானம், குடிநீா், மோா் போன்றவை வழங்கப்பட்டன. மாலையில் கிரிவலம் முடிந்த பின்னா் உற்சவமூா்த்திகள் கோயிலுக்குள் கொண்டு செல்லப்பட்டனா்.
கயிலை மலையிலிருந்து உடைந்து விழுந்த ஒரு சிறிய துண்டு இந்த கைலாசகிரி மலை என்று கருதப்படுவதால், ஆண்டுதோறும் மகா சிவராத்திரி மற்றும் மாட்டுப் பொங்கல் என ஆண்டுக்கு இருமுறை காஹஸ்தீஸ்வரா் கிரிவலம் வருவது குறிப்பிடத்தக்கது.