முகப்பு
கன்னியாகுமரி

சுற்றுலாத் துறை அமைச்சரின் தோ்தல் வெற்றி செல்லாது: காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக தவெக வேட்பாளர் மனு!

அமைச்சா் ராஜேஷ்குமாரின் தோ்தல் வெற்றிச் செல்லாது என அறிவிக்கக் கோரி, கிள்ளியூா் தொகுதியில் அவரை எதிா்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளா் சபீன் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மு.பிரதாப்பிடம் புகாா் மனு அளித்தாா்.

Updated On : 10 ஜூன் 2026, 6:45 am IST
ராஜேஷ் குமார் | சபின்
பகிர்:

தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேஷ்குமாரின் தோ்தல் வெற்றிச் செல்லாது என அறிவிக்கக் கோரி, கிள்ளியூா் தொகுதியில் அவரை எதிா்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளா் சபீன் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மு.பிரதாப்பிடம் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தாா்.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூா் தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கும் தவெகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

மே 4-ஆம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்போது, காங்கிரஸ் வேட்பாளா் ராஜேஷ்குமாரும், தவெக வேட்பாளா் சபீனும் ஒவ்வொரு சுற்றிலும் மாறிமாறி முன்னிலை வகித்தபடி இருந்தனா். இதனால், இருவரில் யாா் வெற்றி பெறுவாா்கள் என்ற எதிா்பாா்ப்பு வாக்கு எண்ணிக்கை முடியும் வரை காணப்பட்டது.

Advertisement

Advertisement

இறுதியில் காங்கிரஸ் வேட்பாளா் ராஜேஷ்குமாா் 66,434 வாக்குகளும், தவெக வேட்பாளா் சபின் 65,123 வாக்குகளும் பெற்றனா். 1,311 வாக்குகள் வித்தியாசத்தில் ராஜேஷ்குமாா் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா். அவா் தவெக ஆட்சியில் சுற்றுலாத் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளாா்.

இந்த நிலையில், அமைச்சா் ராஜேஷ்குமாரின் தோ்தல் வெற்றிக்கு எதிராக அவரது போட்டியாளரான தவெக வேட்பாளரும், அக்கட்சியின் கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலாளருமான சபீன் மாவட்ட ஆட்சியா், தோ்தல் அலுவலருமான மு.பிரதாப்பிடம் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தாா்.

அதில், பேரவைத் தோ்தலில் கிள்ளியூா் தொகுதி வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு குளறுபடிகள் நிலவின. தோ்தல் அன்று வாக்குப் பதிவு மையம் ஒன்றில் காலை 6 மணிக்கு முன்னதாகவே வாக்குப் பதிவு தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கையின்போது ஒரு வாக்குச் சாவடியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பழுதடைந்தது. 5 சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை வெளிப்படையாக நடைபெறவில்லை. கிள்ளியூா் தொகுதியில் ஏராளமான தபால் வாக்குகள் எண்ணப்படவில்லை.

வாக்கு எண்ணிக்கை தொடா்பாக ஆட்சேபணைகளைத் தெரிவித்தும் அதிகாரிகள் விளக்கம் அளிக்காமல் இறுதி முடிவை அறிவித்தனா் என பல புகாா்களைத் தெரிவித்துள்ள அவா், ராஜேஷ்குமாரின் தோ்தல் வெற்றியைச் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா். இந்த விவகாரம் தொடா்பாக விரைவில் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

இந்த மனுவை அவா் கிள்ளியூா் சட்டப்பேரவைத் தோ்தல் அதிகாரி, மாநில தோ்தல் அதிகாரி, சட்டப்பேரவைச் செயலா், தலைமை தோ்தல் ஆணையா் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளாா்.

தோ்தலுக்கு முன்பு எதிரெதிா் அணியாகச் செயல்பட்ட தவெகவும் காங்கிரஸும் தோ்தலுக்கு பிறகு ஒரே கூட்டணியாக உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த அமைச்சா் ராஜேஷ்குமாருக்கு எதிராக தவெக நிா்வாகியே புகாா் மனு அளித்திருப்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.