திருப்பதியில் வருடாந்திர பிரம்மோற்சவம்: அன்னப் பறவை வாகனத்தில் காமாட்சி அம்மன் சமேத கபிலேஸ்வரர்
திருப்பதியில் உள்ள கபில தீர்த்தம் அருவிக்கரையில் அமைந்துள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் திங்கள்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருப்பதியில் உள்ள கபில தீர்த்தம் அருவிக்கரையில் அமைந்துள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் திங்கள்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இக்கோயிலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகிக்கிறது. இங்கு வருடாந்திர பிரம்மோற்சவம் திங்கள்கிழமை காலையில் தொடங்கியது. இதையொட்டி, நந்தி பட்டம் தாங்கிய கொடி கோயிலுக்குள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
பின்னர் கொடிமரத்துக்கும், பஞ்சமூர்த்திகளுக்கும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதன்பின் சோமாஸ்கந்த மூர்த்தி, காமாட்சி அம்மன், விநாயகர், சண்டிகேஸ்வரர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் உள்ளிட்ட உற்சவர்கள் முன்னிலையில் நந்தி பட்டம் தாங்கிய கொடி கும்ப லக்னத்தில் கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.
அதையடுத்து, உற்சவர்களுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் காலை 10 மணிக்கு காமாட்சி அம்மன் உடனுறை கபிலேஸ்வரர் மாடவீதியில் பல்லக்கில் வலம் வந்தார். மாலை 6 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு பிரம்மோற்சவத்தின் முதல் வாகனச் சேவையான அன்னப் பறவை வாகனத்தில் காமாட்சி அம்மனும், கபிலேஸ்வரரும் இணைந்து மாடவீதியில் வலம் வந்தனர்.