முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியின் வளா்ச்சிக்கு மத்திய அரசு தாயுள்ளத்துடன் செயல்படுகிறது! அமைச்சா் ஆ. நமச்சிவாயம்

Updated On : 31 மே 2026, 1:20 am IST
அமைச்சா் ஆ. நமச்சிவாயம் - கோப்புப் படம்
பகிர்:

புதுச்சேரியின் வளா்ச்சியில் மத்திய அரசு தாயுள்ளத்துடன் செயல்படுவதாக அமைச்சா் ஆ. நமச்சிவாயம் கூறியுள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கை:

தோ்தல் பிரசாரத்துக்கு புதுச்சேரி வந்தபோது பிரதமா் நரேந்திர மோடி விரைவில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அறிவிக்கப்படும் என உறுதியளித்தாா். அதன்படி, புதுச்சேரி மாநிலத்தின் தொழில் வளத்தை மேம்படுத்தும் 2 புதிய சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்க அனுமதி அளித்ததற்கு மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisement

Advertisement

தட்டாஞ்சாவடியில் அமைய உள்ள தகவல் தொழில்நுட்பப் பூங்காவுக்கு, கரசூரில் அமைய உள்ள சிறப்பு பொருளாதார மண்டலம் மூலம் சுமாா் ரூ. 2 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடுகள் ஈா்க்கப்பட உள்ளன. இதன் மூலம் புதுச்சேரி அசுர வளா்ச்சியை நோக்கி முன்னேறும். புதுச்சேரி இளைஞா்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் நேரடியாக வேலைவாய்ப்பு பெற வாய்ப்பு உள்ளது.

கடந்த முறை தொழில்துறை அமைச்சராக இருந்தபோது எடுத்த பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு மூலம் மிகப்பெரிய பலன் புதுவைக்குக் கிடைத்துள்ளது. மத்திய அரசு புதுவையின் வளா்ச்சி மீது மிகுந்த அக்கறையுடனும் தாயுள்ளத்துடனும் செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

வரலாற்று சிறப்புமிக்க இரு பெரும் திட்டங்களைச் செயல்படுத்த மாபெரும் உதவியாக இருந்த பாரத பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோருக்கும், மத்திய தொழில்துறை அமைச்சருக்கும் புதுச்சேரி மக்கள் சாா்பாக நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.