முகப்பு
செய்திகள்

பித்ரு தோஷம் எதனால் ஏற்படுகிறது? என்னவெல்லாம் செய்யும்?

தோஷங்களில் மிகக் கடுமையான தோஷம் என்றால் அது பித்ரு தோஷம் தான். ஒருவரின்..

Updated On : 7 மார்ச் 2019, 12:51 pm IST
பகிர்:

தோஷங்களில் மிகக் கடுமையான தோஷம் என்றால் அது பித்ரு தோஷம் தான். ஒருவரின் ஜாதகத்தில் 1, 3, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் சாய கிரகங்களான ராகு, கேது இருந்தாலும், சூரிய சந்திரன் ராகு அல்லது கேது கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும் அந்த ஜாதக அமைப்பானது பித்ரு தோஷ அமைப்பாகும்.

பித்ரு தோஷம் ஏற்படக் காரணம் என்ன? 

நமது தாய் வழி மற்றும் தந்தை வழி வாழ்ந்து மறைந்துபோன முன்னோர்கள் நமது பித்ருக்கள் ஆவர். பித்ருக்களின் ஆத்மா சாந்தி அடையாததால் ஏற்படும் தோஷமே பித்ரு தோஷமாகும். ஒருவர் முற்பிறவியில் தாய் தந்தையைக் கவனிக்காமல் இருப்பது, உடன் பிறந்தவர்களைக் கொடுமைப்படுத்துவது, கருச்சிதைவு செய்தல் இவையெல்லாம் பித்ரு தோஷம் ஏற்படுவதற்கான காரணங்கள் ஆகும். 

Advertisement

Advertisement

பித்ரு தோஷம் என்ன செய்யும்?

பித்ரு தோஷ ஜாதக அமைப்பு கொண்ட ஜாதகருக்கு திருமணம் மிக தாமதமாக நடக்கும் அல்லது திருமணம் நடக்காமலும் இருக்கும். அப்படி திருமணம் நடந்தாலும் விவாகரத்து ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளது.

கணவன், மனைவியிடையே அன்யோன்யம் இருக்காது, வெறுப்பு அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை பிரச்னையாக இருக்கும். 

ஒரு சிலருக்குப் பலமுறை திருமணமும், கலப்பு திருமணமும் நடைபெறும். ஒரு சிலர் பெற்றோர்களுக்கு தெரியாமல் ரகசிய காதல் திருமணம் செய்து கொள்வர்.

கடவுளிடம் நமக்குக் கிடைக்கும் வரங்கள் அனைத்தும் பித்ரு தேவதைகள் நம்மை அனுபவிக்கவிடாமல் செய்துவிடுவார்கள். 

பித்ரு தோஷ பரிகாரங்கள் 

பித்ரு தோஷம் உள்ளவர்கள் பரிகாரம் செய்யாமல் இருந்தால் அவர்கள் தொடர்ந்து கஷ்டங்களை அனுபவித்து வருவார்கள். எத்தனை கோவில்களுக்குச் சென்று வந்தாலும் பித்ருவிற்கு பரிகாரம் செய்யாமல் பித்ரு தோஷம் நிவர்த்தியாகாது. 

ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களிலும் பிதிர்களுக்குச் செய்யும் தர்ப்பணம் மற்றும் தானங்கள் நமது அனைத்து தோஷங்களையும் நீக்கும். மிகக்கடுமையான பிதுர் தோஷம் உடையவர்கள் இராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்வது அவசியம்.

திருவாதிரை, புனர்பூசம், பூசம் நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பிதுர் தர்ப்பணம் பன்னிரண்டு ஆண்டுகள் பிதுர் திருப்தி ஏற்படுத்தும். 

அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பித்ரு பூஜையானது பித்ருக்களுக்கும், தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய காலத்தைத் தரும்.

அமாவாசை அவிட்ட நட்சத்திரத்தில் வரும் காலங்களில் பித்ருக்களை நினைத்து அன்னதானம் செய்யலாம். ராமேஸ்வரம், காளஹஸ்தி, திருபாம்புரம், திருநாகேஸ்வரம் போன்ற பரிகாரத் தலங்களுக்குச் சென்று பிதுர்தோஷ பரிகாரங்களை முறையாக செய்துவர பித்ரு தோஷத்தில் இருந்து விடுபடலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.