கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
சாரங்கபாணி கோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேரும், 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானதும், ஏழு ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட தலமாக விளங்கும் கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் அமைந்துள்ளது. 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானதும், 1,500 ஆண்டுகள் பழமையானதும், ஏழு ஆழ்வார்களால் மங்களாசாசன செய்யப்பட்ட தலமாக விளங்கி வருகிறது.
இங்கு ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இதேபோல் இந்தாண்டு கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.
Advertisement
விழாவினை முன்னிட்டு தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது.
திருவாரூர் மற்றும் திருவில்லிபுத்தூருக்கு அடுத்தபடியாக பெரிய தேராக விளங்கி வருகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீதேவி - பூமிதேவி, தாயார்களுடன் சாரங்கபாணி சுவாமி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளித்தார். காலையிலேயே வெயில் கொளுத்தி வரும் நிலையில் ஏராளமானோர் வெயிலினை பொருட்படுத்தாமல் தேரினை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
இந்த தேர் 110 அடி உயரமும் - 550 டன் எடையும் கொண்டது. நான்கு பிரம்மாண்ட குதிரைகள் தேரினை இழுத்துச் செல்வது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.