திருவனந்தபுரம் : ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலில் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்றப்படும் லட்ச தீபம் திருவிழா இன்று(ஜன. 14) மாலை கோலாகலமாக நடைபெற்றது.
திருவிதாங்கூர் மன்னர் ஆனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா ஆட்சியில் கடந்த 1750-இல் முதல்முறையாகத் தொடங்கப்பட்ட லட்ச தீபம் விழாவானது, ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டின் விழா கடந்த நவ. 20 தொடங்கியது.
‘முராஜாபம்’ விழா நிறைவடையும் ஜன. 14-ஆம் தேதியன்று லட்ச தீபமேற்றுதல் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், சபரிமலையில் மகர ஜோதி தரிசன நாளான இன்றைய நாளில் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டன.
இதையொட்டி, கோயில் வளாகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. லட்ச தீப அனுமதிச்சீட்டு பெற்ற பக்தர்கள் மட்டுமே வளாகப் பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இன்று மாலை 6.30 மணிக்கு கோயில் பிரதான நுழைவாயிலில் நிலவிளக்கு ஏற்றப்பட்டு லட்ச தீப விழா தொடங்கியது. இரவு 8.30 மணிக்கு தங்கக் கருட வாகனத்தில் சுவாமி உலா நடைபெறுகிறது. திருவிதாங்கூர் மன்னர் பரம்பரை குடும்பத்தினர் இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.ஜன. 15 மற்றும் 16 ஆகிய இரு நாள்களும் பக்தர்கள் பார்வைக்காக லட்ச தீபமேற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.