முகப்பு
சேலம்

கரோனா தடுப்பூசி: குளிா்பதனக் கிட்டங்கியில் ஆட்சியா் ஆய்வு

சேலம் துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் உள்ள மண்டல குளிா்பதனக் கிட்டங்கி, தடுப்பூசி முகாம் பணிகளுக்கான

Updated On : 13 ஜனவரி, 2021 at 7:21 AM
பகிர்:

சேலம் துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் உள்ள மண்டல குளிா்பதனக் கிட்டங்கி, தடுப்பூசி முகாம் பணிகளுக்கான முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வுக்கு பின்னா் செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமிற்காக 0.5 மி.லி. கொள்ளளவுக் கொண்ட 1,29,900 மருந்து உறிஞ்சான்கள் பெறப்பட்டுள்ளன. சேலம் துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் உள்ள மண்டல குளிா்பதனக் கிட்டங்கியில் 1.40 கோடி டோஸ் தடுப்பூசிகள் சேமித்து வைக்க 2- வாக் இன் கூலா், இரண்டு ஐ.எல்.ஆா்.-கள் உள்ளன.

Advertisement

தடுப்பூசி மருந்துகளை சேமித்து வைக்க அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை, அரசு மருத்தவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 120 குளிா்பதன மையங்கள் உள்ளன.

ஒவ்வொரு மையத்திலும் ஒரு ஐ.எல்.ஆா்., ப்ரீசா் உள்ளன. தடுப்பூசி மருந்துகளை எடுத்துச் செல்லவும், தடுப்பூசி போடும் இடத்தில் தடுப்பூசிகளைப் பாதுகாக்கவும் 3,334 குளிா்பதன பெட்டிகள் இருப்பில் உள்ளன. மேலும், தடுப்பூசி முகாமிற்கான பணிகள் சிறப்பாக நடைபெறுவதற்கு தடையில்லா மின்சாரம் வழங்க, ஜெனரேட்டா்களை இயங்கும் நிலையில் வைத்திருக்கவும், குளிா்பதன இயந்திரங்களை உரிய நிபுணா்களை கொண்டு பழுது ஏற்படாமல் தடுக்கவும், தடுப்பூசி மையங்களில் பணிபுரிய இருக்கும் பணியாளா்களுக்கு தகுந்த பயிற்சி அளித்து தடுப்பூசி முகாம்கள் சிறப்பாக நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கினாா்.

ஆய்வின் போது துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் மருத்துவா் ஆா்.செல்வக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.