தகவல்கள் 3
ஒருமுறை நாவலர் சோமசுந்தர பாரதியார் அமரகவி பாரதியாருக்கு ஒரு பட்டுத் துண்டை அன்புடன் வழங்கினார்.
உயர்ந்த உள்ளம்
ஒருமுறை நாவலர் சோமசுந்தர பாரதியார் அமரகவி பாரதியாருக்கு ஒரு பட்டுத் துண்டை அன்புடன் வழங்கினார். அதனைப் போர்த்திக்கொண்டு உலாவப் போனார் பாரதியார். அவர் சென்ற வழியில் ஒருவன் உடையின்றிக் கிடப்பதைப் பார்த்த பாரதியார் அப்பட்டுத் துண்டை அவனுக்குப் போர்த்திவிட்டார்.
துண்டு இல்லாமல் திரும்பி வந்த பாரதியாரைக் கண்ட நாவலர்,""துண்டு எங்கே?'' என்று கேட்டார். பாரதியார் நாவலரை அழைத்துக்கொண்டு போய்த் தெருவில் உடையின்றிக் கிடந்தவனைச் சுட்டிக் காட்டினார். இந்தச் செயலைக் கண்டு உருகிய நாவலர்,""பாரதி நன்றாக இருக்க வேண்டுமானால் இந்த உலகம் நன்றாக இருக்க வேண்டும்'' என்று உளம் கசிந்தார்.
ஜி.அருள்குமார், மன்னார்குடி
இதிலென்ன அதிசயம்!
காந்தி ஒருமுறை ஷிமோகாவுக்குச் சென்றிருந்தார். அவருடன் சுதந்திரப் போராட்ட தியாகிகள் சிலரும் சென்றிருந்தனர். ""இங்கே ஜோக் ஃபால்ஸ் என்ற நீர்வீழ்ச்சி இருக்கிறது. இவ்வளவு தொலைவு வந்துவிட்டோம். அதைப் பார்க்கலாமே!'' என்றனர் அவர்கள்.
""எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. நீங்கள் போய்ப் பாருங்கள்'' என்றார் காந்தி.
""என்ன அப்படிச் சொல்லிவிட்டீர்கள். நயாகராவைவிட மிக உயரத்திலிருந்து விழுகிறதாம். இந்த அதிசயத்தை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும்'' என்றனர் அவர்கள்.
காந்தி சொன்னார்,""இதிலென்ன அதிசயம்! ஆகாயத்திலிருந்து விழும் மழைத் தண்ணீரைவிடவா இது உயரத்திலிருந்து கொட்டுகிறது?''
ஆ.பிரியதர்ஷினி, திருநெல்வேலி.
கருணை உள்ளம்
ஒருமுறை வடலூரில் வள்ளலார் பிரசங்கம் செய்த சமயம், அவருடைய சொற்பொழிவைக் கேட்க அக்கம் பக்கத்து கிராமத்தில் இருந்தவர்கள் எல்லாம் கூடினார்கள். மாட்டு வண்டியில் வந்த செல்வந்தர் வள்ளலார் பிரசங்கத்தை ஆரம்பிக்கும் முன்னால் அங்கு சென்றுவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் மாட்டை அடித்து வேக வேகமாக ஓட்டி வந்தார்.
பிரசங்கம் செய்ய வந்த வள்ளலார், நுரை தள்ளியபடியே மூச்சிரைத்தப்படி நின்று கொண்டு இருந்த மாட்டைப் பார்த்தார். உடனே மேடையைவிட்டு இறங்கி மாட்டருகே சென்றார்.
அதன் கழுத்தை கட்டிப்பிடித்துக்கொண்டு, ""என்னால் அல்லவோ உங்களுக்கு இந்தக் கதி'' என்று கண்ணீர் பெருகினார்.
செல்வந்தர் வெட்கித் தலைகுனிந்தார்.
வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலார், கண்ணீர் சிந்திய அற்புதத்தை என்னவென்பது?
மா.பா.சங்கர நாராயணன், முத்துப்பேட்டை.