அன்று எம்.ஜி.ஆர். இன்று ஜெயலலிதா
தில்லித் தமிழ்ச் சங்கத்துக்கு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அளித்த உதவியைப் போல, அவரது வழியைப் பின்பற்றிவரும் தமிழக முதல்வர்
தில்லித் தமிழ்ச் சங்கத்துக்கு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அளித்த உதவியைப் போல, அவரது வழியைப் பின்பற்றிவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, சங்கத்துக்கு "தமிழ்த் தாய்' விருது வழங்கி கௌரவம் அளித்துள்ளார் என்று முன்னாள் தலைவர் ராமாமிர்தம் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
தில்லித் தமிழ்ச் சங்கத்தைப் பாராட்டி ராமாமிர்தம் பேசியதாவது: தில்லித் தமிழ்ச் சங்கத்துடன் நீண்டகாலம் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஒரு ரூபாய் வாடகை கட்டணத்தில் இயங்கிவந்த தமிழ்ச் சங்கம் இன்று இந்தியாவின் சிறந்த, பெரிய தமிழ்ச் சங்கமாக திகழ்கிறது. 1987-ம் ஆண்டில் நான் தலைவரானபோது, சங்கத்தின் கட்டட வேலைகள் போதிய நிதி ஆதாரமில்லாததால் கிடப்பில் இருந்தன. தில்லி அரசின்கீழ் உள்ள நில வளர்ச்சி ஆணையம், மாநகராட்சி ஆகியவை வரி கட்டுவது தொடர்பாகவும், சங்கக் கட்டடத்தில் வங்கி நடத்துவது தொடர்பாகவும் கேள்விகள் எழுப்பின.
பல தடங்கல்களுக்கு மத்தியில் தமிழ்ச் சங்கக் கட்டடத்தை கட்டுவதற்கு முயன்று வந்தோம். அப்போது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரை சந்தித்தோம்.
Advertisement
உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவிட்டு வந்திருந்த அவரால் அப்போது சரியாக பேசக்கூட முடியவில்லை. சங்கத்தின் நிலைமையை அவரிடம் எடுத்துரைத்தோம். அதைக் கேட்டதும் கையைத் தூக்கியபடி சைகையில் பேசினார் எம்.ஜி.ஆர்.
அதற்கு நான் நன்றி கூறிவிட்டு வந்ததைப் பார்த்தவர்கள், ""முதல்வர் என்ன கூறினார்?'' என்று என்னை குழப்பத்துடன் கேட்டனர். நான், "ஐந்து லட்சம் ரூபாய் தருகிறேன் என்று முதல்வர் பதில் அளித்தார்' என்று சொன்னேன். ஆனால் என்னுடன் வந்தவர்களோ, "நீங்கள் அதைத் தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள், அவர் பொறுங்கள் என்று சொன்னார்' என்று குறிப்பிட்டனர்.
பிறகு நாங்கள் தில்லி வந்து சேர்ந்தோம். அப்போது, தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் இருந்து ""சங்கத்தின் கட்டட செலவுக்காக ரூ. 5 லட்சம் கொடுக்க முதல்வர் முடிவு செய்துள்ளார்'' என்று தகவல் வந்தது.
அன்று மக்கள் திலகம் இந்த சங்கத்துக்காக உதவினார். இப்போது, அவர் வழியில் வந்துள்ள தமிழக முதல்வர் (ஜெயலலிதா) சங்கத்துக்கு "தமிழ்த் தாய்' விருது அளித்து கௌரவித்துள்ளார் என்று ராமாமிர்தம் பேசினார்.