ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்தியக் கப்பல் திஷா! ஜூன் 18 இந்தியா வந்தடையும்!
இந்திய எரிவாயு கப்பலான திஷா ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து வந்துகொண்டிருப்பதாக கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய எரிவாயு கப்பலான திஷா ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து வந்துகொண்டிருப்பதாக கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய கப்பல் கூட்டமைப்பால் நிர்வகிக்கப்படும் திஷா என்கிற எல்.என்.ஜி. எரிவாயு கப்பல், ஹோர்முஸ் நீரிணைப் பாதுகாப்பாகக் கடந்து 62,370 மெட்ரிக் டன் எல்.என்.ஜி. எரிவாயுவுடன் இந்தியா வந்துகொண்டிருப்பதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சகத்தின் இயக்குனர் ஓபேஷ் குமார் சர்மா தெரிவித்தார்.
தில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், ”இந்தியா வந்துகொண்டிருக்கும் திஷா கப்பல் குஜராத்தின் தஹேஜ் துறைமுகத்தை வந்தடையும். பெரும்பாலும் வருகிற 18 அன்று கப்பல் இந்தியா வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்தியக் கடல்சார் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க அமைச்சகம் வாயிலாக வெளியுறவுத் துறை, வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள், கப்பல் நிறுவனங்கள் மற்றும் பிற தரப்பினருடனும் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம்.
அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறை செயல்பாட்டிற்கு வந்ததிலிருந்து 12,737 அழைப்புகளையும், 28,299-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்களையும் கையாண்டுள்ளது.
அதேபோல, கடந்த 96 மணி நேரத்தில் கடல்சார் பணியாளர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் துறை சார்ந்த நபர்களிடமிருந்து மொத்தம் 406 அழைப்புகளும் 784 மின்னஞ்சல்களும் பெறப்பட்டு பதில்கள் அனுப்பப்பட்டுள்ளன.
மேலும், கப்பல் போக்குவரத்துத் துறை மூலம் இதுவரை 3,587-க்கும் மேற்பட்ட இந்தியக் கப்பல் ஊழியர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்ப அமைச்சகம் வழிசெய்துள்ளது. இந்தியா முழுவதும் துறைமுகம் சார்ந்த நடவடிக்கைகள் எந்தப் பிரச்னையுமின்றி சிறப்பாக நடைபெற்று வருகின்றன” என்று கூறினார்.