அமெரிக்க தாக்குதலால் ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக மூடல்! - ஈரான் அறிவிப்பு!
ஹோர்முஸ் நீரிணை அடுத்த அறிவிப்பு வரும் வரையில் முழுவதுமாக மூடப்படுகிறதாக ஈரான் அரசு அறிவிப்பு...
அமெரிக்க படைகளின் தாக்குதல்களைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை அடுத்த அறிவிப்பு வரும் வரையில் முழுவதுமாக மூடப்படுகிறதாக, ஈரான் அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த திங்களன்று (ஜூன் 8) ஹோர்முஸ் நீரிணை அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட அமெரிக்க ராணுவத்தின் அபாச்சி ஹெலிகாப்டரை ஈரானிய படைகள் சுட்டு வீழ்த்தின.
இதற்குப் பதிலடியாக ஈரானிய கட்டமைப்புகள் மீது அமெரிக்க படைகள் தாக்கியதால், ஜோர்டான், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து ஈரான் ராணுவம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக மூடப்படுவதாக, ஈரானிய புரட்சிகர காவல் படை அறிவித்துள்ளது. இதனால், மீண்டும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடால் பல்வேறு நாடுகள் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து, பாரசீக வளைகுடா நீரிணை அதிகாரிகள் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
“அமெரிக்க படைகளின் தாக்குதலால் ஏற்பட்டுள்ள பதற்றம் மற்றும் கடந்த இரவு ஈரானிய படைகள் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஹோர்முஸ் நீரிணை அடுத்த அறிவிப்பு வரும் வரையில் முழுவதுமாக மூடப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.
இத்துடன், ஹோர்முஸ் நீரிணையைக் கடப்பதற்காக விண்ணப்பித்து அனுமதி பெற்றுள்ள கப்பல்கள் ஈரானிய படைகளிடம் இருந்து வரும் அறிவுறுத்தல்களுக்குப் பொறுமையுடன் காத்திருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.