வந்தவாறு வருமாறு
வந்தவாறு வருமாறு - புலவர் வே. பதுமனார்; பக்.304; ரூ.300; ஜெயக்கொடி பதிப்பகம், குடியாத்தம் 632602; ✆ 94434 90703.
தமிழறிஞர் புலவர் வே. பதுமனாரின் தன் வரலாறுதான் நூலாகியிருக்கிறது. தலைப்புக்கு அவர் தந்துள்ள விளக்கமே தமிழ்ப் பேராறு.
பெங்களூரில் அவர் பிறந்த காலம் தொடங்கி, தமிழகத்தில் குடியேறிய காலம், தமிழறிந்த காலம், ஆசிரியப் பணிக் காலம், மேடைக் காலம், தமிழியக்கக் காலம் எனப் பல்வேறு படலங்களாக விரிகிறது நூல்.
Advertisement
Advertisement
வகுப்பறையில் எண் எட்டைப் பிரிக்கச் சொன்னபோது, குறுக்காகப் பிரிக்கவா, நெடுக்காகப் பிரிக்கவா? என்று கேட்ட புத்திசாலி மாணவன், இன்று எந்த அளவில் உயர்ந்து நிற்கிறான் என்பதையெல்லாம் நினைவுகூர்ந்து எழுதியிருக்கிறார்.
வெளிநாட்டுப் பயணங்கள் பற்றிய பதிவுகளின் இடையே கம்பவாரிதி ஜெயராஜின் திருவடிகள் கொலுவிருக்கும் பூசையறையையும் அறிமுகப்படுத்துகிறார்.
தன் வரலாறு என்றாலும் தமிழ் வரலாறு, தமிழ் அமைப்புகளின் வரலாறு, வி.ஐ.டி. பல்கலை. வரலாறு போன்றவையும் நூலில் பிரித்துப்பார்க்க முடியாதபடி பிணைந்திருக்கின்றன.
தமிழியக்கப் படலத்தில் புலவரின் வாழ்விலும் செயற்பாடுகளிலும் எந்தளவுக்கு அவருடைய பள்ளி வகுப்புத் தோழரான வி.ஐ.டி. வேந்தர் கோ. விசுவநாதன் கலந்திருக்கிறார் எனத் தெளிவாகிறது. பிற்காலத்தில் பதுமனாரான பத்மநாபன் என்ற சிறுவனின் இளம்பருவ வாழ்க்கை நிகழ்வுகள், ஒரு வங்க மொழித் திரைப்படம் பார்க்கிற அல்லது நாவலை வாசிக்கிற அனுபவத்தைத் தருபவை.
நூல் தன் வரலாறு மட்டுல்ல, பதுமனார் என்ற ஒரு தனிமனிதரின் வாழ்வின் வெற்றிக்குப் பின்னால் எத்தகையதோர் உழைப்பும் ஊக்கமும் உறுதிப்பாடும் இருக்கின்றன என்பதுடன் இன்றைய இளைஞர்கள் கற்றறிவதற்கான ஆவணப் பதிவும்கூட!