தேசிய வில் வித்தை: முதல்வர் ஜெயலலிதா ரூ.50 லட்சம் நிதியுதவி
தேசிய வில் வித்தை போட்டிகளுக்கு தமிழக அரசின் பங்களிப்பாக ரூ.50 லட்சம் நிதியுதவி
தேசிய வில் வித்தை போட்டிகளுக்கு தமிழக அரசின் பங்களிப்பாக ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்தார் முதல்வர் ஜெயலலிதா.
இதற்கான காசோலையை தமிழ்நாடு வில் வித்தை சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹுசைனியிடம் அவர் வழங்கினார்.
இது குறித்து தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:பிரேசில் நாட்டிலுள்ள ரியோடி ஜெனிரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் வரும் 2016-ம் ஆண்டு நடைபெறவுள்ளன.
Advertisement
Advertisement
இந்தப் போட்டிகளில் தமிழகத்தில் இருந்து வில் வித்தை வீரர்கள் பங்கேற்று விருதுகள் பெற ஊக்குவிக்கவும், நவீன உபகரணங்கள் மற்றும் பயிற்சிகள் குறித்து அவர்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், சென்னையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 33-வது தேசிய வில் வித்தை போட்டிகள் கடந்த 26-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெற்றன.
தேசிய அளவிலான வில் வித்தை போட்டிகள் தமிழகத்தில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். இந்தப் போட்டிகளில் ஏற்கெனவே ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள் உள்பட 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
சென்னையில் 33-வது தேசிய வில் வித்தை போட்டிகளை சிறப்பாக நடத்த தேவையான நிதியுதவி அளிக்க வேண்டுமென தமிழ்நாடு வில் வித்தை சங்க நிர்வாகிகள் கோரிக்கை அளித்திருந்தனர்.
அவர்களுடைய கோரிக்கையை ஏற்று, ரூ.50 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை வழங்கினார்.