பெங்களூர் அணிக்கு 5-வது வெற்றி
ஐபிஎல் போட்டியின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
ஐபிஎல் போட்டியின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய பெங்களூர் அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 123 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஐபிஎல் போட்டியின் 27-வது ஆட்டம் பெங்களூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.
Advertisement
இதைத் தொடர்ந்து களமிறங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ். வாட்சன், ரஹானே ஆகியோர் அந்த அணியின் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 10 ரன்னாக உயர்ந்தபோது, 6 ரன் எடுத்திருந்த வாட்சன் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து 14 ரன்களில் ரஹானேவும் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ஸ்டூவார்ட் பின்னி, கேப்டன் திராவிட்டுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது.
அணியின் ஸ்கோர் 66-க உயர்ந்தபோது 33 ரன்கள் எடுத்திருந்த பின்னி ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து திராவிட் 35 ரன்களில் வெளியேறினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அந்த அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களை எடுத்தது.
பெங்களூர் அணியில் ஆர்.பி. சிங், வினய் குமார் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
117 ரன்கள் என்ற எளிதான இலக்கை சேஸ் செய்ய பெங்களூர் அணியின் கெய்லும், தில்ஷானும் களமிறங்கினர். வெற்றி இலக்கு குறைவு என்பதால், இந்த ஜோடி அதிரடியாகவும் அதேசமயம், நிதானத்துடனும் விளையாடியது. அணியின் ஸ்கோர் 53-க உயர்ந்தபோது இந்த ஜோடி பிரிந்தது. 22 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்த தில்ஷான் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கோலி 1 ரன்னிலும், டி வில்லியர்ஸ் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
நான்காவது வீரராகக் களமிறங்கிய திவாரி, கெய்லுடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் கவனமாக விளையாடினர். இறுதியில் அந்த அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கெய்ல் 49 ரன்களுடனும், திவாரி 25 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
17.4-வது ஓவரில் இரு அணியின் ஸ்கோரும் சமமாயின. அதுவரை பொறுமையாக ஆடி வந்த கெய்ல், அடுத்த பந்தில் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். இந்த ஆட்டத்தில் அவர் அடித்த முதல் சிக்ஸர் இதுவாகும்.
ராஜஸ்தான் அணியின் முக்கியமான 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வினய் குமாருக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் 5 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் முதலிடத்தில் உள்ளது.