ராஜஸ்தானுக்கு 142 ரன்கள் இலக்கு
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தானுக்கு 142 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தானுக்கு 142 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.
முதலில் பேட் செய்த சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த சூப்பர் கிங்ஸ் அணியில் மைக் ஹசி-முரளி விஜய் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 11.3 ஓவர்களில் 83 ரன்கள் சேர்த்தது. 40 பந்துகளைச் சந்தித்த ஹசி 6 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டூவர்ட் பின்னி பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். பின்னர் வந்த ரெய்னா 1, கேப்டன் தோனி 2 ரன்களில் ஆட்டமிழக்க, ரவீந்திர ஜடேஜா களம்புகுந்தார். மறுமுனையில் 49 பந்துகளில் அரைசதம் கண்ட முரளி விஜய், 50 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். முன்னதாக விஜய் 46 ரன்களில் ரன் அவுட்டில் இருந்து தப்பியது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
கடைசிக் கட்டத்தில் பிராவோ 11 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 23 ரன்கள் எடுக்க, சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 14 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சிக்ஸர் இல்லை: சூப்பர் கிங்ஸ் பேட் செய்தால் அங்கு சிக்ஸருக்கு பஞ்சம் இருக்காது என்பது ரசிகர்களின் எண்ணம். ஆனால் இந்த ஆட்டத்தில் மைக் ஹசி, விஜய் ஆகியோர் நிதானமாக ஆடியதாலும், தோனி, ரெய்னா ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததாலும், சூப்பர் கிங்ஸ் அணி ஒரு சிக்ஸர்கூட அடிக்கவில்லை. 16 பவுண்டரிகள் மட்டுமே அடிக்கப்பட்டன.