மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ளதாக இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோட்டக் தெரிவித்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் அதன் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியைத் தழுவியது.
சூப்பர் 8 சுற்றின் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. சென்னை சேப்பாக்கம் திடலில் நாளை (பிப்ரவரி 26) நடைபெறும் மிக முக்கியமான ஆட்டத்தில் இந்திய அணி ஜிம்பாப்வேவை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில், மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ளதாக இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோட்டக் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதனால் இந்திய அணியின் மீதான அழுத்தம் மற்றும் எதிர்பார்ப்பு அதிக அளவில் இருக்கும். எந்தவொரு சர்வதேசப் போட்டியில் விளையாடும்போதும், அழுத்தம் என்பது இருக்குமென்பதை நான் அதிகம் நம்புகிறேன். டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் மிகவும் அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் அழுத்தம் என்பது இருக்கும். நாட்டுக்காக உலகக் கோப்பைத் தொடரில் விளையாடும்போது, கண்டிப்பாக அழுத்தம் இருக்கும்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடந்தப் போட்டியில் இந்திய அணி வீரர்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடவில்லை. இது குறித்து பலரும் பேசி வருவதால், இந்திய அணிக்கு அழுத்தம் என்பது இருக்கும். ஆனால், இந்திய அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் திறம்பட அழுத்தத்தை எதிர்கொண்டு விளையாடக் கூடியவர்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல விரும்பினால், அழுத்தத்தை திறம்பட எதிர்கொண்டு சிறப்பாக செயல்பட வேண்டியிருக்கிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.