பாராலிம்பிக்: வெள்ளி, வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனைகள்!
பாரீஸ் பாராலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு மேலும் இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன
பாட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதேபோட்டியில் மனிஷா ராமதாஸ் வெண்கலம் வென்றார்.
17வது பாராலிம்பிக் போட்டிகள் பாரீஸ் நகரில் கடந்த 28ஆம் தேதிமுதல் நடைபெற்று வருகிறது.
5ஆம் நாளான இன்று (செப். 2) மகளிர் ஒற்றையர் பிரிவில் துளசிமதி முருகேசன் சீனாவின் யாங் கியூக்ஸியாவை எதிர்கொண்டார்.
Advertisement
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 21 - 17, 21 - 10 என்ற புள்ளிக் கணக்கில் கியூக்ஸியாவிடம் தோல்வி அடைந்தார். இதன்மூலம் துளசிமதி வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
இதேபோன்று மற்றொரு போட்டியில் மனிஷா ராமதாஸ் டென்மார்க்கின் கேத்ரின் ரோசென்கிரென்னை எதிர்கொண்டார். இப்போட்டியில் 21- 12, 21 - 8 என்ற புள்ளிக் கணக்கில் மனிஷா வெற்றி பெற்றார். இதன்மூலம் வெண்கலப் பதக்கத்தை அவர் வென்றார்.
இவர்கள் இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
22வது இடத்தில் இந்தியா
ஆடவருக்கான வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் யோகேஷ் கதுனியா வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.
பாட்மின்டன் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் நிதேஷ் குமார் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
பாராலிம்பிக் பதக்கப் பட்டியலில் 2 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களுடன் 22வது இடத்தில் இந்தியா உள்ளது.