பெட்ரோல் விலை உயர்வுக்கு ஜெயலலிதா கண்டனம்
அடிக்கடி விலையை ஏற்றுவது ஏழை எளிய மக்களை பாதிக்கும். எனவே விலை உயர்வைத் திரும்பப் பெறுவதுடன் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய்
சென்னை, மார்ச் 1: பெட்ரோல் விலை உயர்வுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்தார்.
அடிக்கடி விலையை ஏற்றுவது ஏழை எளிய மக்களை பாதிக்கும். எனவே விலை உயர்வைத் திரும்பப் பெறுவதுடன் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ளும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என்றும் அவர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பெட்ரோல் விலையை ரூ.1.50-க்கும், டீசலை லிட்டருக்கு 45 காசுகள் என்ற நிலையிலும் உயர்த்தி இரண்டு வாரங்கள் கூட முடிவடையாத சூழலில், மீண்டும் சர்வதேசச் சந்தை விலையையும், இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதையும் சுட்டிக்காட்டி மீண்டும் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.1.40 என்ற அளவுக்கு உயர்த்தியிருப்பது மிகுந்த வேதனைக்குரியது. இதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Advertisement
இப்போதைய பெட்ரோல் விலை உயர்வைச் சுட்டிக்காட்டி, வாகன உரிமையாளர்கள் வாகன கட்டணங்களை உயர்த்தக் கூடும் என்ற நிலை உருவாகும். இதனால் அனைத்துப் பொருள்களின் விலையும் மேலும் பன்மடங்கு உயரக் கூடும். இதனால் மக்கள் சொல்லொணா துயரத்துக்கு ஆளாக்கப்படுவார்கள்.
பொருளாதாரம் சீரழியும்: பெட்ரோலியப் பொருள்களின் விலையை அடிக்கடி உயர்த்துவது ஏழை, எளிய மக்களை பாதிக்கும் செயல். மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை மற்றும் விலை நிர்ணயக் கொள்கை நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழிக்க வழிவகுக்குமே தவிர, மேம்படுத்த வழிவகுக்காது. இந்திய ரூபாயின் மதிப்பு என்பது நடப்புக் கணக்கு பற்றாக்குறை மற்றும் அன்னிய நேரடி முதலீடு, அன்னிய நிறுவனங்கள் முதலீடு ஆகியவற்றின் அடிப்படையிலும், நாட்டின் பொருளாதார நிலைத் தன்மை குறித்த பார்வையின் அடிப்படையிலும் அமையக் கூடியது.
எனவே, அவ்வப்போது மாறும் ரூபாய் மதிப்பின் அடிப்படையில் பெட்ரோலியப் பொருள்களின் விலையை அடிக்கடி மாற்றி அமைப்பது என்பது பொருளாதார நிலைத் தன்மைக்கு ஊறு விளைவிக்கும்.
இதனைக் கருத்தில் கொண்டு, நான் ஏற்கெனவே பலமுறை கூறியுள்ளபடி, பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயக் கொள்கையில் உடனடி மாற்றம் கொண்டுவர வேண்டுமென்று மத்திய அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன்.
இதுபோன்று இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி மக்களைத் துன்புறுத்தினால் மத்தியில் ஆட்சியே ஆபத்தில் முடிந்துவிடும் அபாயம் ள்ளது என்று எச்சரிக்க விரும்புகிறேன் என தனது அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.