சேது சமுத்திரத் திட்டம்: தமிழக அரசு பதிலளிக்க 2 வார அவகாசம்
சேது சமுத்திர கால்வாய்த் திட்டத்தை, ஏற்கெனவே திட்டமிட்டபடி, ஆறாவது கடல் பாதையில் செயல்படுத்த
சேது சமுத்திர கால்வாய்த் திட்டத்தை, ஏற்கெனவே திட்டமிட்டபடி, ஆறாவது கடல் பாதையில் செயல்படுத்த விரும்புவதாக மத்திய அரசு கூறியுள்ள நிலைப்பாடு குறித்து பதில் அளிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் இரண்டு வார அவகாசம் வழங்கியது.
நீதிபதிகள் எச்.எல். தத்து, ஜெகதீஷ் சிங் கேஹர் அடங்கிய அமர்வு முன்பு சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் தொடர்பான வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ள ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, நீதிமன்றம் கடந்த மாதம் பிறப்பித்த உத்தரவின்படி, பதில் மனு தாக்கல் செய்திருந்தார்.
Advertisement
வழக்கு விசாரணை தொடங்கியதுபோது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் பாலாஜி, ""சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து ஏற்கெனவே தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அதனால், திட்டம் தொடர்பாக மத்திய அரசின் நிலை குறித்து பதில் அளிக்க தமிழக அரசுக்கு அவகாசம் வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்.
அப்போது, ""இந்த வழக்கில் மனுதாரர்கள் பலரும் பதில் அளிக்க அவகாசம் கோருவதால் விசாரணையில் தொய்வு ஏற்படுகிறது'' என்று நீதிபதிகள் கூறினர்.
அதையடுத்து சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில், ""இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும். சேது சமுத்திரக் கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள ஆறாவது பாதையில் ராமர் பாலம் உள்ளதாக ஹிந்துக்கள் நம்புகின்றனர்.
அதனால், அந்தப் பகுதியை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்'' என்றார்.
அதையடுத்து, "இந்தத் திட்டம் தொடர்பான மத்திய அரசின் நிலை குறித்து பதில் அளிக்க தமிழக அரசுக்கு இரண்டு வார அவகாசம் வழங்கப்படுகிறது.
தமிழக அரசு தாக்கல் செய்யும் பதில் மனுவின் நகல்களை மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல், மனுதாரர்கள் ஆகியோருக்கு தமிழக அரசு வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.