முகப்பு
தமிழ்நாடு

ஜி.பி.எஸ். மின்னணு பயணச் சீட்டு கருவிகள்: முறைகேடு இல்லை: திமுக புகாருக்கு அமைச்சர் விளக்கம்

ஜி.பி.எஸ். வசதியுடன் மின்னணு பயணச் சீட்டு கருவிகளை தயாரிப்பதற்கான ஒப்பந்த நடவடிக்கைகளில் எந்த முறைகேடும்

Updated On : 2 ஏப்ரல், 2013 at 1:08 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:07 PM

ஜி.பி.எஸ். வசதியுடன் மின்னணு பயணச் சீட்டு கருவிகளை தயாரிப்பதற்கான ஒப்பந்த நடவடிக்கைகளில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

சட்டப் பேரவையில் இந்தப் பிரச்னை குறித்து திமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் திங்கள்கிழமை கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்துக்குப் பதிலளித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியது:

ஜி.பி.எஸ். எனும் புவி இருப்பிட முறைமை வசதி கொண்ட கையடக்க இயந்திரங்களைப் பயன்படுத்தி மின்னணு பயணச் சீட்டு வழங்கும் முறையை அனைத்துப் பஸ்களிலும் அறிமுகப்படுத்த சட்டப் பேரவையில் கடந்த ஆண்டு மே மாதம் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டார்.

Advertisement

இதைத் தொடர்ந்து இந்தத் திட்டத்துக்கான ஒப்பந்தப் புள்ளி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி வெளியிடப்பட்டது. ஒப்பந்தப் புள்ளி சமர்ப்பிக்க கடந்த ஜனவரி 24 கடைசி ஆகும். ஒப்பந்தப் புள்ளிகள் ஆய்வு செய்யப்பட்டு திறக்கப்பட்ட நாள் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி. இறுதி செய்யப்பட்டது பிப்ரவரி 28.

இதன்படி நான்கு கூட்டுக் குழுமங்கள் தங்களது ஒப்பந்தப் புள்ளிகள் அளித்தன.

முறைகேடுகள் ஏதும் இல்லை: இந்த ஒப்பந்தப் புள்ளிகள் அரசுத் துறைகளைச் சேர்ந்த 6 பேர் கொண்ட ஆய்வுக் குழுவால் பரிசீலிக்கப்பட்டது. மேலும் 6 பேர் கொண்ட ஒப்பந்தப்புள்ளி நிர்ணயக் குழுவும் அரசால் அமைக்கப்பட்டது. அதன்படி, குறைந்த தொகையை அதாவது, ஒரு பயணச் சீட்டுக்கு 13.43 பைசா எனக் கோரியிருந்த ஹைதராபாத் இன்ஜெனரி டெக்னாலஜிஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் தலைமையிலான கூட்டுக் குழுமம் தேர்வு செய்யப்பட்டது. அந்த நிறுவனம் கோரியிருந்த விலைப் புள்ளியை மேலும் குறைக்கக் கூறப்பட்டது. இதையடுத்து, ஒரு பயணச் சீட்டுக்கு 13.40 பைசா என்ற வகையில் அளிக்க அந்த நிறுவனம் ஒப்புக் கொண்டது.

எனவே, சரியான முறையில் ஆய்வு செய்யப்பட்டு விதிமுறைகளின்படி ஒப்பந்தப் புள்ளி இறுதி செய்து அளிக்கப்பட்டுள்ளது.

போதுமான அனுபவம் இருக்கிறது: ஒப்பந்தப் புள்ளி அறிவிக்கப்பட்ட அதே நாளில் புதிதாகத் தொடங்கிய ஒரு நிறுவனத்துக்கு பணி வழங்கி விட்டதாக குற்றம்சாட்டப்பட்டு இருக்கிறது. அது உண்மையல்ல. அதுவரை மேங்கோ ஹெல்த் கேர் சொல்யூஷன்ஸ் என்ற பெயரில் இயங்கி வந்த ஏழாண்டு அனுபவம் பெற்ற நிறுவனம், இன்ஜெனரி டெக்னாலஜீஸ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிட்., ஹைதராபாத் என்ற பெயரில் இந்திய கம்பெனி சட்டத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சொந்தமாக மின்னணு பயணச்சீட்டு கருவிகள் வாங்கி ஐந்து ஆண்டுகள் பயன்படுத்த ரூ.267.49 கோடி அரசுக்கு செலவாகும். ஆனால், இப்போதைய புதிய நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படவுள்ள கருவிகளைப் பெற அரசுக்கு ரூ.239.5 கோடி செலவாகும். இதனால், ரூ.27.97 கோடி செலவு குறையும் என்றார் அமைச்சர் செந்தில்பாலாஜி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.