அணு உலை பொருள்களின் தரம்: ஆய்வு செய்ய வைகோ வலியுறுத்தல்
கூடங்குளம் அணு உலைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருள்கள் தரமானவையா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று மதிமுக
கூடங்குளம் அணு உலைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருள்கள் தரமானவையா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
கூடங்குளம் அணு உலைக்கான பொருள்களை வாங்குவதில் ஊழல் நடந்திருக்கக் கூடும் என்று வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கூடங்குளம் அணு உலைக்காக பொருள்கள் வாங்கப்பட்ட ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஜியோ-போல்டோஸ்க் என்கிற நிறுவனத்தின் அதிகாரி செர்ஜி ஷுடோவ் பல நாடுகளிலுள்ள அணு உலைகளுக்கு தரக்குறைவான பொருள்களை வழங்கினார் என்ற ஊழல் குற்றசாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Advertisement
இந்தியா, பல்கேரியா, ஈரான், சீனா உள்ளிட்ட நாடுகளில் ரஷ்யா அமைத்து வரும் அணு உலைகளுக்கு பொருள்கள் வழங்கி வரும் இந்நிறுவனம் இப்போது பல சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறது.
தங்களுடைய நாட்டில் அமைந்துள்ள அணு உலைகளுக்கு வழங்கப்பட்ட பொருள்கள் பற்றிய விவரங்கள் மட்டுமல்லாமல் தரச் சான்றிதழையும் கோரியுள்ளது பல்கேரியா.
தரக்குறைவான பொருள்களைப் பற்றி சீனாவும் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
போராட்டத்தை முன்னெடுத்து வரும் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தகவலறியும் உரிமையின் கீழ் கோரிப் பெற்றிருக்கும் தகவலின் படி, கூடங்குளம் அணு உலைகளின் அழுத்தக் கலனின் மையப் பகுதியில் இரண்டு இடங்களில் இணைப்பு இருப்பது தெரிய வந்திருக்கிறது.
அணு உலைகளின் அழுத்தக் கலனில் இணைப்புகள் அமைப்பது அதன் முதிர்வு காலத்தை வேகப்படுத்தும் என்பதால் உலகெங்கும் அணு உலைகளில் இப்படிப்பட்ட இணைப்புகளை பொதுவாக அமைப்பதில்லை என்றும் சொல்லப்படுகிறது. அணு உலையில் வால்வுகள் சரியில்லை என்பதை அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புக் கொண்டுள்ளது. எனவே, தரக்குறைவான பொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்வதோடு அல்லாமல், மக்களின் நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளித்து அணு உலைகளை உடனடியாக மூட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.