மரக்காணம் கலவரம்: உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம்
மரக்காணம் கலவரத்தில் இறந்த 2 பேர் குடும்பத்துக்கும், தீக்குளித்து இறந்த ஒருவர் குடும்பத்துக்கும் தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று பாமக
மரக்காணம் கலவரத்தில் இறந்த 2 பேர் குடும்பத்துக்கும், தீக்குளித்து இறந்த ஒருவர் குடும்பத்துக்கும் தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: மரக்காணம் கலவரத்தில் அரியலூர் செல்வராஜ், கும்பகோணம் விவேக் ஆகிய இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
மரக்காணம் கலவரத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்தான் திட்டமிட்டு நடத்தினர் என்ற போதிலும், இதற்காக அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
Advertisement
ஒரே கட்சியைச் சேர்ந்த, ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த 89 பேர் ஒரே வாரத்தில் அடக்குமுறை சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது இந்தியாவில் இதுதான் முதல்முறையாகும்.
பாமகவை ஒடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழக அரசு மேற்கொண்டுவரும் இந்த அடக்குமுறையை பாமக எதிர்கொள்ளும். மரக்காணம் கலவரத்திலும், அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளிலும் பாதிக்கப்பட்ட பாமகவினருக்கு உதவிகளை வழங்க கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது.
அதன்படி மரக்காணம் கலவரத்தில் கொல்லப்பட்ட அரியலூர் செல்வராஜ், கும்பகோணம் விவேக் ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்.
அதேபோல் ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தீக்குளித்த திருவண்ணாமலை மாவட்டம் கீழ்செட்டிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தொண்டர் பாண்டியனின் குடும்பத்துக்கும் தலா ரூ. 3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்.
அதிமுக அரசால் பழி வாங்கும் நோக்குடன் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த 89 பேர் இதுவரை குண்டர் சட்டத்திலும், தேசிய பாதுகாப்புச் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் விடுதலை செய்யப்படும்வரை இவர்களின் குடும்பத்துக்காக நிதி மற்றும் பொருள் உதவிகளைக் கட்சி வழங்கும். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் சட்ட உதவி வழங்குதல் மற்றும் அதற்கான அனைத்துச் செலவுகளையும் பாமக ஏற்கும் என்று அவர் கூறியுள்ளார்.