முகப்பு
தமிழ்நாடு

ஆவின் நிறுவனத்தில் பிளாஸ்டிக் பை உபயோகம் அதிகரிப்பு

பிளாஸ்டிக் பை ஒழிப்பில் தீவிரம் காட்டும் தமிழக அரசு, ஆவின் நிறுவனத்தில் அதிகரித்துள்ள பிளாஸ்டிக் பை உபயோகத்தை தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Updated On : 22 ஜூன், 2013 at 5:13 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:14 PM

பிளாஸ்டிக் பை ஒழிப்பில் தீவிரம் காட்டும் தமிழக அரசு, ஆவின் நிறுவனத்தில் அதிகரித்துள்ள பிளாஸ்டிக் பை உபயோகத்தை தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

பூமி வெப்பமயமாதல், நிலத்தடி நீர்மட்டம் சரிவு ஆகியவற்றை தடுக்கும் பொருட்டு, பிளாஸ்டிக் பொருள்கள் உபயோகத்தை நிறுத்துதல், பூமியில் புதைந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுதல், மரம் வளர்த்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

இதுகுறித்த அரசின் உத்தரவின் பேரில் தமிழகத்தின் பெரும்பாலான நகராட்சி, ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பிளாஸ்டிக் ஒழிப்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கடைகளில் விற்கப்படும் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்வது, மக்களுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அதன்படி குப்பையை பிரித்து கொட்டுவது, கடைகளுக்கு வீடுகளில் இருந்து துணிப் பைகளை எடுத்துச் செல்ல மக்களை அறிவுறுத்துவது போன்ற நடவடிக்கைகளை அலுவலர்கள் எடுத்து வருகின்றனர். எனினும், தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் அதிகளவில் உள்ளது. குறிப்பாக கேரிபேக்குகள், உணவு பொருள்கள் அடைத்து வரும் பைகள், இலைகளுக்கு பதில் ஓட்டல்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மைகா உள்ளிட்ட பல வகைகளில் பிளாஸ்டிக் உபயோகத்தில் உள்ளது.

Advertisement

அரசு நிறுவனங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு: ஒருபுறம் அரசு பிளாஸ்டிக் ஒழிப்பை தீவிரப்படுத்தி வந்தாலும், மறுபுறம், அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்தில் பிளாஸ்டிக் உபயோகம் அதிகளவில் உள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் தமிழகம் முழுவதுமுள்ள ஆவின் பாலகங்களில் மக்களுக்கு பிளாஸ்டிக் பையில் பொருள்களை வழங்குகின்றனர். அதே போல் கூட்டுறவுத் துறையிலும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு அதிகளவில் உள்ளது.

பிளாஸ்டிக் பைகளின் ஒழிப்பை தீவிரமாக்கும் அரசு முதலில் தனது நிறுவனங்களில்

ஒழிக்க வேண்டும், அப்போதுதான் மக்களிடமும் அதுகுறித்த விழிப்புணர்வை தீவிரப்படுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

விரைவில் தடை:இதுகுறித்து ஆவின் நிர்வாகத்தில் கேட்டபோது: ஆவின் பாலகங்களில் இதுபோல் பிளாஸ்டிக் பைகள் வழங்குவதை தவிர்த்து வருகிறோம். மேலும் வீட்டில் இருந்து பைகளை எடுத்து வரும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம். இன்றும் சில பாலகங்களில் பிளாஸ்டிக் பைகள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. அவை அனைத்தும் 9 மைக்ரான் அளவுக்கு மேல் மறுசுழற்சி செய்யக் கூடிய பைகள் மட்டுமே உபயோகிக்கப்படுகிறது. அதுவும் விரைவில் தடை செய்யப்படும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.