முகப்பு
தமிழ்நாடு

இந்து என்றால் திருடன் என்று நான் கூறவில்லை

இந்து என்றால் திருடன் என அர்த்தம் என்று தான் கூறவில்லையென தி.மு.க. தலைவர் கருணாநிதி உயர் நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளார்.

Updated On : 22 ஜூன், 2013 at 8:10 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:13 PM

இந்து என்றால் திருடன் என அர்த்தம் என்று தான் கூறவில்லையென தி.மு.க. தலைவர் கருணாநிதி உயர் நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளார்.

தமிழக அரசின் மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கண்டித்து கடந்த 24.10.2002 அன்று சென்னையில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசினார். அந்தக் கூட்டத்தில் இந்து மத மக்கள் குறித்து கருணாநிதி பேசியது தொடர்பாக சென்னை மயிலாப்பூர் வேத அறிவியல் ஆய்வு மைய இயக்குநர் பி.ஆர்.கெüதமன், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் அதிகம் கூடியிருந்த கூட்டத்தில் கடந்த 24.10.2002 அன்று பேசிய முன்னாள் முதல்வர் கருணாநிதி, இந்து என்றால் திருடன் என பொருள் என்று பேசினார். இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் விதத்திலும், மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையிலும் பேசிய கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் நான் புகார் அளித்தேன்.

Advertisement

எனினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் நான் வழக்குத் தொடர்ந்து, நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு 6.1.2006 அன்று போலீஸார் எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். எனினும், அதன் பிறகு கருணாநிதியை அழைத்து விசாரிக்கவோ, அவர் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவோ போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆகவே, இந்த வழக்கு தொடர்பாக கருணாநிதியிடம் விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திடுமாறு காவல் துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கெüதமன் கோரியுள்ளார்.

கருணாநிதி பதில்: இந்நிலையில், இந்த மனு தொடர்பாக தனது வழக்குரைஞர்கள் எம்.தண்டபாணி, எல்.பாஸ்கரன் மற்றும் ஏ.கோபிநாத் ஆகியோர் மூலம் உயர் நீதிமன்றத்தில் கருணாநிதி பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார். மனுதாரர் குறிப்பிடும் பொதுக் கூட்டத்தில் இந்து மக்களை திருடன் என்ற அர்த்தத்தில் நான் எதுவும் பேசவில்லை. உள்ளம் கவர்ந்த திருடன் என்றுதான் நான் பேசினேன். ஆனால், இதன் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல் என் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

நான் தமிழகத்தின் முதல்வராக ஐந்து முறை, அதாவது 19 ஆண்டுகள் இருந்துள்ளேன். இந்திரா காந்தி உள்ளிட்ட பல தேசியத் தலைவர்களுடன் மேடைகளில் பேசியுள்ளேன். வி.பி. சிங், ஐ.கே.குஜ்ரால், தேவகெüடா, வாஜ்பாய் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரின் தலைமையிலான மத்திய அரசுகளில் தி.மு.க. அங்கம் வகித்துள்ளது.

சுமார் 16 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசில் இடம்பெற்று செயல்பட்ட மாநிலக் கட்சி தி.மு.க.வைத் தவிர நாட்டில் வேறு எந்தக் கட்சியும் இல்லை. ஒருவேளை மனுதாரர் கூறுவது போன்ற கருத்துகளை இந்துக்களுக்கு எதிராக நான் கூறியிருந்தால் தேசிய அரசியலில் இத்தகைய முக்கியத்துவம் தந்து என்னை யாரும் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள்.

இந்த மனு அரசியல் காரணங்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கருணாநிதி கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.