முகப்பு
தமிழ்நாடு

என்.எல்.சி. பங்குகள் விற்பனை: மார்க்சிஸ்ட் கண்டனம்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி.) 5 சதவீத பங்குளை விற்பது என்ற மத்திய அரசின் முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளது.

Updated On : 22 ஜூன் 2013, 4:23 am IST
பகிர்:

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி.) 5 சதவீத பங்குளை விற்பது என்ற மத்திய அரசின் முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை விற்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

Advertisement

Advertisement

நிதிப்பற்றாக்குறையைச் சமாளிக்க எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின் மூலம் அரசுக்கு ரூ. 466 கோடி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரச் சீர்திருத்தங்கள் வேகமாக செயல்படுத்தப்படும் என பிரதமரும், நிதி அமைச்சரும் அறிவித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு என்.எல்.சி.யின் 10 சதவீத பங்ககளை விற்க முயற்சித்த போது, மக்களின் எதிர்ப்பைக் கண்டு அந்த முயற்சியில் இருந்து மத்திய அரசு பின்வாங்கியது. இடதுசாரி கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக மத்திய அரசுக்கு ஆதரவான கட்சிகள் கூட தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

என்.எல்.சி.யின் பங்குகளை விற்க அரசு முடிவு செய்துள்ள செய்தி வெளியானதும் கடந்த மாதமே மார்க்சிஸ்ட் தனது எதிர்ப்பை தெரிவித்தது. பங்கு விற்பனையை கைவிடுமாறு தமிழக முதல்வரும் பிரதமருக்கு கடிதம் எழுதினார். தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்தன.

ஆனால், அனைத்துத் தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. பொதுத்துறையை அழித்து தனியார்மயத்துக்கு வலுவூட்டும் மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என ஜி. ராமகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.