முகப்பு
தமிழ்நாடு

108 ஆம்புலன்ஸ் திட்டத்தை கொண்டு வந்தது பாமகதான்

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தைக் கொண்டு வந்தது திமுகவும் அதிமுகவும் அல்ல, பாமக தான் என்று அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Updated On : 6 ஜூலை 2017, 2:30 am IST
பகிர்:

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தைக் கொண்டு வந்தது திமுகவும் அதிமுகவும் அல்ல, பாமக தான் என்று அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தைக் கொண்டு வந்தது யார் என்பது குறித்து அதிமுக அமைச்சருக்கும், திமுக முன்னாள் அமைச்சர்களுக்கும் இடையே சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றுள்ளது. வாரிசு இல்லாத சொத்துக்கு ஊரில் உள்ளவர்கள் அடித்துக் கொள்வதைப் போல, இரு தரப்பினரும் தவறான தகவல்களைப் பதிவு செய்துள்ளனர். 108 ஆம்புலன்ஸ் திட்டத்துக்கும் அதிமுக மற்றும் திமுகவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
இந்தத் திட்டம் மத்திய அரசின் திட்டமாகும். 2004 - ஆம் ஆண்டு மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற நான், 2005 - ஆம் ஆண்டில் தேசிய ஊரக சுகாதார இயக்கத்தைத் தொடங்கினேன். அந்தத் திட்டத்தின் ஓர் அங்கமாகத்தான் 108 ஆம்புலன்ஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அப்போது 108 என்ற எண், ராணுவத்தின் பயன்பாட்டில் இருந்ததால் நாடு முழுவதும் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. இதுதொடர்பாக அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி, தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி, 108 என்ற எண்ணை வாங்கி நாடு முழுவதும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
தமிழகத்தில் இந்தத் திட்டம் 2008 - ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதற்கு முன்பே பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. பல மாநிலங்களுக்கு நானே நேரில் சென்று திட்டத்தைத் தொடக்கி வைத்தேன். அந்த மாநிலங்களில் எல்லாம் அதிமுகவும், திமுகவும் தான் ஆட்சி செய்தனவா என்பதை அந்தக் கட்சிகள் விளக்க வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.